நோய் பரவல்.. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது.. அரசுக்கு புகழேந்தி கடிதம்
தற்போது தமிழகத்தில் நோய்த்தொற்று அதிகரித்து வரும் சூழலில் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் ஆட்களை திரட்டி பொதுக்குழு கூட்டம் நடத்தினால் நோய் பரவல் அதிகரிக்கும் என புகழேந்தி கூறியுள்ளார்.
சென்னை: தமிழக அரசு வரும் 11ஆம் தேதி அதிமுக நடத்தவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என புகழேந்தி கடிதம் எழுதியுள்ளார். நோய்த்தொற்று அதிகரித்து வரும் சூழலில் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் ஆட்களை திரட்டி பொதுக்குழு கூட்டம் நடத்தினால் நோய் பரவல் அதிகரிக்கும் எனவும் புகழேந்தி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் கதவுகளை ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் தட்டியுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் கதவுகளையும் தட்டி மாறி மாறி மனு கொடுத்து வருகின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமியின் மனைவிக்கும் அவரது பாதுகாப்பாளர்களுக்கும் கொரோனா தொற்று பரவி உள்ளதால் அவர் யாரையும் சந்திக்காமல் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

ஜூலை 11ல் பொதுக்குழு
கொரோனா பரவல் காரணமாக ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழுவிற்கு அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பரபரப்பான சூழலுக்கு மத்தியில் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தீவிரமாக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

புகழேந்தி பேட்டி
ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் தினசரியும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் அவரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோருக்கு தான் கடிதம் எழுதியுள்ளதாக கூறினார்.

தடை கோரி கடிதம்
தற்போது தமிழகத்தில் நோய்த்தொற்று அதிகரித்து வரும் சூழலில் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் ஆட்களை திரட்டி பொதுக்குழு கூட்டம் நடத்தினால் நோய் பரவல் அதிகரிக்கும் என கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளேன். தற்போது நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில், தமிழக அரசு வரும் 11ஆம் தேதி அதிமுக நடத்தவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

நோய் தொற்று
ஏற்கனவே கடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஏராளமான எண்ணிக்கையில் ஆட்கள் கலந்து கொண்டதால் அதிமுகவைச் சேர்ந்த பலருக்கும் நோய் தொற்று ஏற்பட்டு உள்ளது என்பதையும் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

மா.சுப்ரமணியன்
அதிமுக பொதுக்குழுவிற்கு தடை வருமா என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் நேற்றைய தினம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் திட்டமில்லை என்று தெரிவித்துள்ளார். அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுக்குழுவை நடத்தலாம் என்றும் மாஸ்க் அணிவதில் இருந்து எந்த விதிவிலக்கும் அளிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications