அதிமுகவினருக்கு பறந்த அழைப்பு.. டிச.10-ல் பொதுக்குழு, செயற்குழு கூட்டம்! முக்கிய முடிவு எடுக்கும் எடப்பாடி
சென்னை: டிசம்பர் 10 ஆம் தேதி சென்னையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழு நடைபெறும் என்றும், சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாருவெங்கடாஜலபதி மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 10 ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைய விதிகளின்படி ஆண்டுதோறும் அரசியல் கட்சிகள் பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டியது அவசியம். அந்த வகையில், அதிமுகவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டும் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக, மெகா கூட்டணி அமைப்போம் என்று கூறி வருகிறது. ஆனாலும் அதிமுக- பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணையும் என்பது இன்னும் முழுமையாக தெரிவியவில்லை.
விஜய்யுடன் கூட்டணி அமைக்க அதிமுக ஆர்வம் காட்டுவதாக கூறப்பட்டாலும், விஜய் தனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என அறிவித்துவிட்டார். எனவே, இந்த பொதுக்குழுவில் கூட்டணி விவகாரம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்த செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுகவில் மிக மூத்த தலைவரான செங்கோட்டையன் நீக்கத்திற்கு பிறகு நடைபெறும் முதல் பொதுக்குழு என்பதால், அதிமுக உள்கட்சி விவகாரங்கள் குறித்து பேசப்படலாம் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications