1977-ம் ஆண்டு முதல் அதிமுகவில் இருக்கிறேன்.. என்னை நீக்கியது நியாயமற்றது- ஓபிஎஸ் வாதம்
அதிமுகவிலிருந்து என்னை காரணமின்றி நீக்கியது நியாயமற்றது- ஓபிஎஸ் வாதம்
சென்னை: அதிமுகவிலிருந்து என்னை காரணமின்றி நீக்கிவிட்டனர் என ஓபிஎஸ் தனது தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்தும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆதரவாளரான ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது பொதுக் குழு தீர்மானங்கள் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் இயற்றப்பட்டது. அந்த கூட்டத்தின் தீர்மானங்களை எதிர்த்து பிப்ரவரி 23 ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஜூலை 11
ஆகையால் ஜூலை 11 பொதுக் குழு தீர்மானங்களை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என வாதிட்டனர். அதிமுக விதிகளின்படி உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் பொதுக் குழுவுக்கு இல்லை. உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைதான் எடுக்க முடியும். ஆனால் ஜூலை 11 பொதுக் குழுவில் சிறப்பு தீர்மானம் போட்டு ஓபிஎஸ் அணியினரை நீக்கி உள்ளனர். ஆகையால் அதிமுக உள்ளிட்ட எதிர்மனுதாரர்களின் கருத்தை கேட்காமல் தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனோஜ்பாண்டியன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்
இந்த வழக்கில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கட்சியை தற்போது இடைக்கால பொதுச் செயலாளரே பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இந்த வழக்கில் பிரதிவாதிகள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை தாக்கல் செய்துள்ள மனோஜ் பாண்டியன் தற்போது கட்சியின் உறுப்பினரே இல்லை.

பொதுக் குழு
ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்துள்ளோம். தன்னை தேர்தல் ஆணையமும் இடைக்கால பொதுச் செயலாளராக பதிவு செய்து கொண்டது என பதில் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

வேட்புமனு தாக்கல்
இந்த பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார். ஒற்றைத் தலைமையை உருவாக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி உரிமையியல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டுமென மனோஜ் பாண்டியன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
இந்த வழக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரிக்கப்பட்டது. அப்போது ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி தரப்பு தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்தனர். இதில் தீர்ப்பளித்த நீதிபதிகள் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடைமுறைகளை தொடரலாம். ஆனால் முடிவுகளை வெளியிடக் கூடாது. அதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக் குழு தீர்மானங்கள் குறித்த பிரதான வழக்கு ஏப்ரல் 11 ஆம் தேதிக்கு பதிலாக மார்ச் 22 இல் இன்றைய தினம் விசாரிக்கப்படுகிறது.

ஓபிஎஸ் வாதம்
இதில் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் தனது தரப்பு வாதங்களை முன் வைத்து வருகிறார். அவர் கூறுகையில் எந்த வாய்ப்பும் அளிக்காமல் காரணமும் கூறாமல் ஓபிஎஸ்ஸை கட்சியிலிருந்து நீக்கியது நியாயமற்றது. அடிப்படை உறுப்பினர்களாலேயே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டனர். இதன் பதவிக்காலம் 2026 வரை இருக்கும் போது ஓபிஎஸ்ஸை கட்சியிலிருந்து நீக்கிவிட்டனர். 1977 முதல் கட்சியில் இருக்கும் ஓபிஎஸ் பொருளாளர் பதவியை வகித்து வருகிறார்.

என்ன வாதம்
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கே தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்துள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களை கொண்டே பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். கட்சியின் விதிகளை பொதுக் குழு திருத்த முடியாது. கட்சியில் பெரும்பான்மை உள்ளது என்பதற்காக எடுத்த முடிவு கட்சி நிறுவனர் எம்ஜிஆரின் நோக்கத்திற்கு விரோதமானது. அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த புதிய நிபந்தனைகளை விதித்து விதியை திருத்தியுள்ளனர். அதிமுகவின் இரட்டை தலைமையை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது. இவ்வாறு ஓபிஎஸ் தரப்பு வாதம் வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications