ஒருங்கிணைப்பாளரா? அப்படி யாரும் இல்லை.. தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தை திருப்பி அனுப்பிய அதிமுக
சென்னை: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அனுப்பிய கடிதத்தை பெற மறுத்து அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள் அதை தேர்தல் ஆணையத்திற்கே திருப்பி அனுப்பிவிட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொந்த ஊர்களை விட்டு பிழைப்புக்காகவும் கல்விக்காகவும் வேறு இடங்களில் தங்கியுள்ள நபர்கள் தேர்தல் நேரத்தில் ஒரு நாளில் சென்று வாக்களித்துவிட்டு வர முடியாது என்பதால் பலர் வாக்களிக்க செல்வதையே விட்டுவிடுகிறார்கள்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் வாக்களிக்க ஏதுவாக ரிமோட் வாக்குப் பதிவு முறையை அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக அரசியல் கட்சித் தலைவர்களை கருத்து கேட்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஜனவரி 16 இல் அரசியல் கட்சிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

ஜனவரி 31 ஆம் தேதிக்குள்
ஜனவரி 31 ஆம் தேதிக்குள் அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்டு முடிக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் ரிமோட் வாக்குப் பதிவு தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு அரசியல் கட்சிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. அந்த வகையில் தமிழக தேர்தல் அதிகாரியான சத்யபிரத சாஹு அதிமுகவுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்
அதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த கடிதத்தை வாங்க அதிமுக தலைமை நிர்வாகிகள் மறுத்து மாநில தேர்தல் ஆணையத்திற்கே திருப்பி அனுப்பிவிட்டனராம். மாநில தேர்தல் அதிகாரி குறிப்பிட்டது போல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகள் இல்லை என கூறி திருப்பி அனுப்பிவிட்டனராம்.

சண்டை
அதிமுக யாருக்கு என்ற சண்டையில் இரட்டை தலைமைகளாக பணியாற்றிய ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமியும் தற்போது மாறி மாறி நிர்வாகிகளை நீக்குவதும் சேர்ப்பதுமாக இருந்து வருகிறார்கள். இருவருமே உண்மையான அதிமுக என கூறி வருகிறார்கள். ஆனால் இந்த விஷயத்தில் ஓபிஎஸ்ஸை விட எடப்பாடி பழனிசாமிக்கே அதிக ஆதரவு பெருகியுள்ளது.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்
அதாவது அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அதிமுக வரவு செலவு கணக்குகளை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது. இது அந்த அணிக்கு பெரும் பிடிப்பை தந்துள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் மாநில தேர்தல் ஆணையத்தின் கடிதத்தால் ஓபிஎஸ் தரப்பு மகிழ்ச்சி அடைந்தது. குஜராத்திற்கு பிரதமர் மோடியின் தாய் மறைவிற்கு நேரில் போய் ஆறுதல் கூற மதுரை விமான நிலையம் வந்த ஓபிஎஸ், மாநில தேர்தல் ஆணையமே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என சொல்லிவிட்டதே என பூரித்து போனார். இதற்கெல்லாம் செக் வைக்கும் விதமாக அந்த பதவிகளில் யாருமே இல்லை என கடிதத்தை அதிமுக தலைமை நிர்வாகிகள் திருப்பி அனுப்பிவிட்டனர். இதுவும் பன்னீர் செல்வத்திற்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications