அதிமுக பொதுக்குழு- உச்சநீதிமன்றத்தில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கேவியட் மனுத் தாக்கல்
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் தங்களது தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் சார்பில் கேவியட் மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்; ஜெயலலிதாவின் நிரந்தர பொதுச்செயலர் பதவியும் பறிக்கப்பட்டது; அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என உத்தரவிட்டார்.மேலும் அதிமுகவில் ஜூன் 23-ந் தேதிக்கு முந்தைய நிலைமைதான் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இத்தீர்ப்பை ஓ.பன்னீர்செல்வம் பட்டாசு வெடித்து கொண்டாடியது.
இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள், அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தனர். இதனால் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்தது செல்லுபடியானது. அதேபோல், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதும் செல்லும் என்கிற நிலைமை உருவானது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நேற்று மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தது. இன்று அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தார்.
அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தால் தமது தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. இதேபோல் அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் உச்சநீதிமன்றத்தில் இன்று கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். அதில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தங்கள் வாதங்களையும் கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications