1988-க்குப் பின்னர் 2-வது முறையாக சீல் வைக்கப்படும் சென்னை அதிமுக தலைமை அலுவலகம்!
சென்னை: 1988-ம் ஆண்டுக்குப் பின்னர் உட்கட்சி மோதலால் சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமை அலுவலகம் இன்று மீண்டும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகம், எம்ஜிஆர் காலம் முதல் செயல்பட்டு வருகிறது. எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் இன்றுவரை அதிமுகவில் மோதல்கள் நிகழ்ந்தால் அக்கட்சி தலைமை அலுவலகம் போர்க்களமாகிவிடுவது வழக்கம்.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம், எம்ஜிஆர் மனைவியும் முன்னாள் முதல்வருமான ஜானகி அம்மாள் பெயரிலானது. அவரால் அதிமுகவுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. 1973-ம் ஆண்டு முதல் ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் மிகப் பெரிய பிளவு ஏற்பட்டது. அதிமுகவானது ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரண்டாகப் பிளவுபட்டது. சட்டசபையில் 2 அதிமுக அணி எம்.எல்.ஏக்களும் கடுமையாக மோதிக்கொண்டனர். இதனையடுத்து சட்டசபையில் அதிமுக இரு கோஷ்டி எம்.எல்.ஏக்களையும் போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
அப்போது அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. அதிமுகவின் இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது. 1988-ல் சிறிது காலம் மட்டும் அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைத்து மூடப்பட்டது. பின்னர் 1989 ஜனவரியில் ஜெயலலிதா கோஷ்டிக்கு அதிமுக தலைமை அலுவலகம் நீதிமன்றத்தால் ஒதுக்கப்பட்டது. இதனை எதிர்த்தும் ஜானகி அம்மாள் தரப்பு நீதிமன்றத்தை நாடியது. இதன்பின்னர் இரு அணிகளும் இணைய அதிமுக தலைமை அலுவலகமானது ஜெயலலிதா வசமானது.
அதன்பின்னரும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு உரிமை கோரி சில அதிருப்தி குரல்கள் எழுந்தது உண்டு. அதிமுக தலைமை அலுவலகத்தில் அடிதடி நிகழ்ந்ததும் உண்டு. ஆனால் 1988-ம் ஆண்டுக்கு பின்னர் இப்போதுதான் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்படுகிறது.
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் தரப்பு இன்று கைப்பற்றியது. இதற்கு இபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இருதரப்பும் அடிதடியில் இறங்கின. இரு பிரிவினரிடையே கத்தி குத்து, கல்வீச்சு சம்பவங்களும் நிகழ்ந்தன. இதனால் அதிமுக தலைமை அலுவலகப் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இன்னொரு பக்கம், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த களேபரங்களுக்கு மத்தியில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் மோதல் நிகழாமல் இருக்க மீண்டும் சீல் வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications