எடப்பாடி தலைமையில் அதிமுக செயல்பட பெரும்பான்மை தலைமை கழக நிர்வாகிகள் முடிவு: ஜெயக்குமார்
சென்னை: அதிமுகவின் தலைமை நிலைய செயலாளரான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படுவது என பெரும்பான்மை அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த 23-ந் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியானது ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளாக மீண்டும் பகிரங்கமாக பிளவுபட்டது. அப்பொதுக்குழுக் கூட்டத்தில் ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில்கள், பேப்பர் உருண்டைகள் வீசப்பட்டன.

ஓபிஎஸ், சசிகலா பயணங்கள்
அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக, பொதுச்செயலாளராக ஈபிஎஸ்தான் நியமிக்கப்பட வேண்டும் என அவரது கோஷ்டியினர் வலியுறுத்துகின்றனர். சென்னையில் ஜூலை 11-ந் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தாம் பொதுக்குழுவில் அவமானப்படுத்தப்பட்டதற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களை சந்திக்க புறப்பட்டுள்ளார் ஓபிஎஸ். இன்னொரு பக்கம் அதிமுக பொதுச்செயலாளர் என்ற அடைமொழியுடன் சசிகலாவும் புரட்சி பயணம் மேற்கொண்டுள்ளார்.

தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம்
இந்நிலையில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டது. அதிமுக தலைமைக் கழகம், தலைமை நிலைய செயலாளர் என்ற பெயரில் இந்த அறிவிப்பு வெளியானது. வழக்கமாக ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்துடன் இத்தகைய கூட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும். ஆனால் இருவரது கையெழுத்தில்லாமல் இந்த அறிவிப்பு நேற்று வெளியாகி இருந்தது.

பரபரத்த யூகங்கள்
இது தொடர்பாக நேற்று இரவு அறிக்கை வெளியிட்ட ஓபிஎஸ், ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்தில்லாமல் நடைபெறும் எந்த கூட்டமும் செல்லாது என கூறியிருந்தார். ஓபிஎஸ்-ன் இந்த கடும் எதிர்ப்புக்கு இடையே சென்னையில் இன்று அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்துக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். இன்றைய கூட்டத்தை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவகத்தில் ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்தனர். இன்றைய கூட்டத்தில் ஓபிஎஸ் கட்சி பதவியான பொருளாளர் பதவி பறிக்கப்படலாம் அல்லது ஓபிஎஸ், அவரது ஆதரவாளர்கள் கூண்டோடு கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படலாம் என கூறப்பட்டது. மேலும் இன்றைய கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்படலாம் எனவும் யூகங்கள் பரவின.

எடப்பாடி தலைமையில்...
இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் பெரும்பான்மையோர் தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக் கொண்டதால் இன்றைய கூட்டம் கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் 65 தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியானதால் அனைவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படுவது என முடிவு செய்துள்ளோம். ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு கூட்டம் தொடர்பாகவும் கூட்டத்துக்கான அழைப்பிதழ் அனுப்புவது தொடர்பாகவும் ஆலோசித்தோம் என்றார்.












Click it and Unblock the Notifications