4 மாஜி அமைச்சர்களை கரூருக்கு அனுப்பி வைக்கும் இபிஎஸ்! 29ஆம் தேதி திமுக அரசை கண்டித்து பொதுக்கூட்டம்!
சென்னை: கரூரில் அதிமுக கவுன்சிலர் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில், திமுக அரசை கண்டித்து வரும் 29ஆம் தேதி கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும், இந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்காக முன்னாள் அமைச்சர்கள் 4 பேரை கரூருக்கு அனுப்பி வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

கவுன்சிலர் கடத்தல்
கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் கழக வேட்பாளர் வெற்றிபெறும் சூழ்நிலை இருந்ததால், மாவட்ட ஊராட்சிக் குழு 9-வது வார்டு உறுப்பினர் திருவிகா மற்றும் அவருடன் பயணம் செய்த கரூர் மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கார் மீது இரும்புக் கம்பியால் தாக்கி கண்ணாடியை உடைத்து, கவுன்சிலரின் முகத்தை துணியால் மூடி காரிலிருந்து கடத்திச் சென்று, தேர்தல் முடிந்தவுடன் விடுவித்துள்ளனர்.

அராஜகத்தின் உச்சம்
திமுக-வினர் அராஜகத்தின் உச்சத்திற்கே சென்று வன்முறைத் தாக்குதல்களை தொடர்ந்து நிகழ்த்தி வருகின்றனர். இந்த படுபாதக செயல்களை விடியா திமுக அரசின் முதலமைச்சர் வேடிக்கை பார்த்து வருவதும், காவல் துறையினர் திமுக-வினருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதும் மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். இதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டிய காலம் விரைவில் வரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வன்மையான கண்டனம்
மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த விடியா திமுக அரசின் முழு ஒத்துழைப்போடு, திமுக-வினர் இத்தகைய அராஜக செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதற்கு, எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அராஜகத்திற்குப் பெயர்போன திமுக-வினரின் வன்முறை செயல்களைக் கண்டித்தும்; சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்குக் காரணமான விடியா அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வருகின்ற 29.12.2022 வியாழக் கிழமை மாலை, கரூர் மாவட்டம், கரூர் மாநகரில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும்.

4 மாஜி அமைச்சர்கள்
இந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில், கே.பி. முனுசாமி, திண்டுக்கல் C. சீனிவாசன், நத்தம் விசுவநாதன், தங்கமணி, ஆகியோர் பங்கேற்பார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். கரூர் மாவட்டம், கரூர் மாநகரில் நடைபெற உள்ள, இந்த கண்டனப் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை, கரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. M.R. விஜயபாஸ்கர் அவர்கள் மேற்கொள்வார்.












Click it and Unblock the Notifications