ஓயாத அதிமுக அதிகார போட்டி.. ஈபிஎஸா? ஓபிஎஸா? திமுக கையில் முக்கிய “அஸ்திரம்”
சென்னை: அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டு உள்ள நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் கட்சித் தலைமையக பிரச்சனையின் முடிவு திமுக அரசின் கைகளில் உள்ளது.
புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்ற உத்தரவுடன் கடந்த 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் கூடியது.
கூட்டத்தில் பேசிய அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், ஜூலை 11-ஆம் தேதி நிச்சயமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவார் எனவும் கூறினார். இதனால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பொதுக்குழு முடிவுக்கு வந்தது.

அதிமுக பொதுக்குழு
இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்தது. இதனை தொடர்ந்து சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது.

இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ்
ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்க மறுபக்கம், பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓபிஎஸ் மனு
இந்த பொதுக்குழு விபரங்களை தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்தது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீசெல்வம் மனுத் தாக்கல் செய்து இருக்கிறார். பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை ஏற்கக்கூடாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் மனுவில் கோரி இருக்கிறார்.

திமுக கையில் அஸ்திரம்
பொதுக்குழுவின்போது அதிமுக தலைமையகத்தில் இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டதால் கட்சித் தலைமையகத்தை வருவாய்துறை அதிகாரிகள் சீல் வைத்ததுடன், 25 ஆம் தேதி இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இதுதொடர்பாக காவல்துறை வழக்கும் பதிவு செய்து உள்ளது. மறுபக்கம் ஆவணங்களை ஓபிஎஸ் தரப்பு எடுத்துச்சென்றதாகவும் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு உள்ளது.

அப்பாவுக்கு ஓபிஎஸ் கடிதம்
அதேபோல் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு வேலுமணியை நியமிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் சபாநாயகர் அப்பாவுக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில், பொதுக்குழு தொடர்பாக நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் மனுக்கள் நிலுவையில் இருப்பதால் சட்டமன்ற குழுவை மாற்றி அமைக்கும் வகையில் கடிதம் வந்தால் நிராகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

திமுக அரசு கையில் அஸ்திரம்
எனவே அதிமுக தலைமை அலுவலகம் யாருக்கு சொந்தம் என்ற முடிவையும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையையும் திமுக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை மற்றும் வருவாய்துறை எடுக்க இருக்கிறது. அதேபோல் எதிர்க்கட்சி துணைத் தலைவர் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதம் தொடர்பாகவும் திமுகவை சேர்ந்த சபாநாயகர் அப்பாவு முடிவெடுக்க வேண்டும். எனவே இந்த மூன்று முக்கிய விவகாரங்களும் திமுக அரசின் கையில் உள்ளது. இதில் உடன்பாடு ஏற்படாதபட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவார்கள்.












Click it and Unblock the Notifications