வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்!
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை இரண்டாம் கட்டமாக அதிமுக தலைமை அறிவித்திருக்கிறது. இருப்பினும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் அதிமுகவினர், கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
அதிமுகவுக்கு சாதகமாக இருந்த தொகுதிகளை பாஜகவுக்கு கை மாற்றிவிட்டது குறித்து, ரத்தத்தின் ரத்தங்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர். நாகர்கோவில், கோவை கிணத்துக்கடவு உள்ளிட்ட தொகுதிகள் ராமநாதபுரம் தொகுதியை பாஜகவுக்கு கொடுத்தது, அதிமுக தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

பல தொகுதிகளில் போராட்டங்களும், கண்டன போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருக்கின்றன. குறிப்பாக நேற்று நாகர்கோவில் மகளிர் அணியினர், அதிமுக தலைமையை கண்டித்தம், தளவாய் சுந்தரத்தின் நடவடிக்கையை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பியிருந்தனர். இந்த 2026 தேர்தலில் எப்படியும் நாகர்கோவில் தொகுதியை கேட்டு பெறுவது என்று மகளிர் அணியினர் உறுதியாக இருந்தனர். ஆனால், கன்னியாகுமரியில் 6 தொகுதிகளில் 4+1 கூட்டணிக்கு கொடுத்துவிட்டது அதிமுக தலைமை. எனவே மகளிர் அணியினர் டென்ஷன் ஆகிவிட்டனர்.
அதேபோல ராமநாதபுரத்தை கட்சி தாரை வார்த்தது, எதிர்ப்பை கிளப்பியிருக்கிறது. ராமநாதபுரத்திற்கு என ஒரு வரலாறு இருக்கிறது. இங்கு ஜெயிக்கும் கட்சிதான் தமிழ்நாட்டை ஆளும். கடந்த 50 ஆண்டுகளில், ராமநாதபுரத்தில் வெற்றி பெறும் கட்சிதான் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறது.
1967: திமுக முதன்முதலில் ஆட்சி அமைத்தபோது, ராமநாதபுரத்தில் திமுக-வின் த.தங்கப்பன் வெற்றி பெற்றார்.
1977: அதிமுக முதன்முதலில் ஆட்சிக்கு வந்தபோது, அங்கு டி. ராமசாமி (அதிமுக) வெற்றி பெற்றார்.
1989: திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, எம்.எஸ்.கே. ராஜேந்திரன் (திமுக) வெற்றி பெற்றார்.
2006: திமுக ஆட்சிக்கு வந்தபோது, அங்கு அக்கூட்டணியில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் அலி வெற்றி பெற்றார்.
2011 & 2016: முறையே மனிதநேய மக்கள் கட்சி (அதிமுக கூட்டணி) மற்றும் டாக்டர் மணிகண்டன் (அதிமுக) வெற்றி பெற்றபோது அதிமுகவே ஆட்சி அமைத்தது.
2021: திமுக ஆட்சிக்கு வந்தபோதும், அங்கு திமுக-வின் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தான் வெற்றி பெற்றார்.
இது தவிர, கும்பகோணத்தை கூட்டணிக்கு ஒதுக்கியதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியிருக்கின்றனர். அதிமுகவினர் ஒருபுறம் எனில், மறுபுறம் பாஜகவினர் பழனி தொகுதியை ஒதுக்க கோரி தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர். அதேபோல சோளிங்கர் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியதை கண்டித்து, அமமுகவினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இப்படி கூட்டணிக்குள் ஏகப்பட்ட கூட்டணி குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications