அதிமுகவில் அடுத்த விக்கெட்டான செங்கோட்டையன்.. அடித்து கொள்ளும் மாஜிகள்! உட்கட்சி பஞ்சாயத்தால் அதகளம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் சசிகலா தொடங்கி செங்கோட்டையன் வரை பல சீனியர்கள் எடப்பாடி பழனிச்சாமியால் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க கட்சிக்குள்ளேயே சில மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் இடையே மோதல் ஏற்பட்டிருப்பது பழனிச்சாமிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது என்கின்றனர் அதிமுகவினர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை அதிக முறை ஆண்ட கட்சி என்ற பெருமையை அதிமுக தக்க வைத்துள்ளது. அதே நேரத்தில் 2026ல் அந்த கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் நிலையில் மேலும் சில கட்சிகள் வந்தால் தான் குறிப்பிடத்தகுந்த இடங்களை பெற முடியும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

அதே நேரத்தில் விஜய் இந்த முறை களத்தில் இறங்கும் நிலையில் திமுக அதிமுகவுக்கு பாதகமாகவே அமையும் என சொல்லப்படுகிறது. இது புறம் இருக்க அதிமுக உட்கட்சி மோதல்கள் தொடர்ந்து அந்த கட்சியை பலவீனப்படுத்தி வருகிறது.

edappadi palaniswami AIADMK sengottaiyan

அதிமுக மோதல்

சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் வரிசையில் செங்கோட்டையினும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். சசிகலா டிடிவி ஓபிஎஸ் ஆகியோர் நீக்கப்பட்டதால் முக்குலத்தோர் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைக்காது என கூறப்படும் நிலையில் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது கொங்கு மண்டலத்தில் சரிவை ஏற்படுத்தலாம் என சொல்லப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க பல்வேறு மாவட்டங்களில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்களுக்கு இடையே நடைபெற்று வரும் பனிப்போர் கட்சியில் சலசலத்தை ஏற்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமை

மதுரையில் செல்லூர் ராஜூ, ஆர்பி உதயகுமார், ராஜன் செல்லப்பா, திண்டுக்கல்லில் நத்தம் விஸ்வநாதன் - திண்டுக்கல் சீனிவாசன், விருதுநகரில் ராஜேந்திர பாலாஜி, மாஃபா பாண்டியராஜன் என அதிமுகவின் முக்கிய முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்குத்து அரசியல் செய்து வருகின்றனர். ஒருவரை வெற்றி பெற விடக்கூடாது என மற்றொருவர் செயல்பட்டு வருவதோடு, அவர்களுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

அதிமுக உட்கட்சி மோதல்

மேலும் குறிப்பிட்ட நபர் அந்த தொகுதியில் நிற்க கூடாது என்பதற்காக பாஜகவுக்கு தள்ளிவிடும் வேலைகளையும் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் தனது எதிர் முகாமை சேர்ந்த நிர்வாகிகளுக்கு ஆதரவாளர்களை கணக்கெடுத்து அவர்களை ஓரம் கட்டும் வேலைகளும் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. வலுவான தொகுதிகளில் தாங்கள் தேர்தலை சந்திப்பதும் கடினமான தொகுதிகளை எதிர் தரப்புக்கு தள்ளி விடுவதும் என உள்குத்து அரசியல் வேலைகள் தற்போது ஆரம்பித்து விட்டதாக சொல்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.

மாவட்டச் செயலாளர் சண்டை

மேற்குறிப்பிட்ட மாவட்டங்கள் மட்டுமல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலைமை என்கின்றனர். மேலும் அவரவர் தொகுதிகளில் மட்டும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் பிற தொகுதிகளில் கட்சியின் தேர்தல் வேலைகளை தொடங்கவே இல்லை என மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. கடந்த தேர்தலில் மிகுந்த அதிருப்தி இருந்தும் அதிமுக 60க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களையும், கூட்டணி வகையில் 70-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை பெற்றது. அதே நேரத்தில் தற்போது உட்கட்சி மோதல்களை சரி செய்யாவிட்டால் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகுந்த நெருக்கடி ஏற்படும் என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+