"பெரியார் மண்" இடைத்தேர்தலில் உறுதி செய்வோம்.. பாஜகவை அதிமுக வளர்த்துவிடுகிறது.. திருமாவளவன் பேட்டி!
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கோரி கூட்டணி கட்சித் தலைவரான திருமாவளவனை, ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தித்தார். இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று என்றும், தமிழ்நாடு பெரியார் மண் என்பது ஈரோட்டில் மீண்டும் உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார். அதேபோல் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்துவிடக் கூடிய வேலையை அதிமுக செய்து வருவதாகவும் விமர்சித்தார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழ்நாடு அரசியல் புயலை கிளப்பியுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் இடைத்தேர்தலில் வெற்றிபெறுவதற்காக திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பாடுகளை தொடங்கியுள்ளது. இதற்காக 11 அமைச்சர்கள் கொண்டு பெரும்படை திமுக தரப்பில் களமிறக்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். இதன் ஒரு பகுதியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவனை நேரில் சந்தித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவு கோரினார்.
ஈரோடு கிழக்கு தேர்தலில் வெற்றி நிச்சயம்- முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் ஈவிகேஎஸ் இளங்கோவன்
மகனின் பணிகளை தொடர்வேன்
இதனைத் தொடர்ந்து திருமாவளவன் மற்றும் ஈவிகேஸ் இளங்கோவன் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைகள் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கு அரணாக காத்து இருக்கிறார். அதனால் நிச்சயம் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியுடையவர்களாக ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் இருப்பார்கள். இந்த வெற்றி திமுகவின் நல்லாட்சிக்கு கிடைத்த பரிசாக இருக்கும். என் மகன் விட்டுச்சென்ற பணிகளை, நான் தொடர்ந்து செய்வேன். திருமகன் ஈவெரா பல நல்ல செயல்களை தொகுதிக்காக செய்துள்ளார். அதற்கேற்ப என் செயல்களும் இருக்கும் என்று தெரிவித்தார்.
ஈரோட்டில் பலிக்காது
தொடர்ந்து, பாஜகவின் நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு, எப்படியாவது தமிழ்நாட்டில் ஊடுருவி விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். பல மாநிலங்களில் எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கி, கொள்ளைப்புறமாக ஆட்சியை அமைத்தவர்கள் பாஜகவினர். அதன் பின்னணியில் தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் அதிமுகவை கையில் வைத்துக் கொண்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் செயல்பாடுகள் ஈரோட்டில் பலிக்காது என்று தெரிவித்தனர்.
திருமாவளவன் பேட்டி
தொடர்ந்து திருமாவளவன் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. தமிழ்நாட்டை பெரியார் மண் என்று கூறுவோம். அதில் ஈரோடு பெரியார் மண். சமூகநீதி அரசியலுக்கான ஆணி வேர் தோன்றிய மண். பெரியாரின் குடும்ப வாரிசாக ஈவிகேஎஸ் இளங்கோவன் களத்தில் இருக்கிறார். இந்த வெற்றி திமுக ஆட்சிக்கு அளிக்கக் கூடிய பரிசாக இருக்கும். இங்கு சனாதன சக்திகளுக்கு இடமில்லை. அவர்களை விரட்டியடிப்பதற்கான வாய்ப்பை தேர்தல் கொடுத்துள்ளது.
பாஜகவை வளர்த்துவிடும் அதிமுக
அதிமுகவை பொறுத்தவரை பாஜகவின் தோள்களில் ஏறி நிற்க கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அதிமுகவினர் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்து விடக்கூடிய அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகள் இல்லை. எத்தனை வேட்பாளர்கள் போட்டாலும், அவர்களால் டெபாசிட் வாங்குவதே கடினம் தான். இது ராகுல் காந்தியின் வெற்றிக்கான அடித்தளமாக இருக்கும். இந்த இடைத்தேர்தலில் விசிக தரப்பில் தீவிரமாக பணியாற்றுவோம். நானும் நேரடியாக ஈவிகேஎஸ் இளங்கோவனுக்காக பிரச்சாரம் செய்வேன் என்று தெரிவித்தார்.