மக்களுக்காக போராடுகிறார்கள்.. அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு நேரில் சென்று பிரேமலதா ஆதரவு
சென்னை: கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்தும், சட்டசபையில் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்தும் அதிமுகவினர் இன்று உண்ணாவிரத போராட்டம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு நேரில் சென்று பிரேமலதா ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் திமுக அரசை விமர்சித்து பேசினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 150க்கும் மேற்பட்டவர்கள் உடல்நலன் பாதிக்கப்பட்டனர். இதில் 60 பேர் பலியாகினர். இன்னும் 69 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க கூறி கடந்த 21 ஆம் தேதி கூடிய சட்டசபையில் அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவைக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக அமளி செய்வதாக கூறி அதிமுகவினர் சட்டசபையில் இருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து அடுத்தடுத்த சட்டசபை கூட்டத்தொடரிலும் கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து விவாதிக்க கூறி தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போதும் அதிமுகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் நேற்று அவை கூடிய போதும் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க கூறி அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். சட்டசபையில் கேள்வி நேரத்திலேயே இந்த விவகாரம் பற்றி விவாதிக்க அவர்கள் வலியுறுத்தி கோஷமிட்டனர். சபாநாயகர் இருக்கை முன்பு வந்து அமளி செய்தனர்.
இதையடுத்து அதிமுகவினரை இந்த கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிப்பதாக சபாநாயகர் அறிவித்தார். சட்டசபையின் மாண்பை சீர்குலைத்ததாக கூறி தடை விதித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இதையடுத்து திமுக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி இன்று காலை அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலியை கண்டித்தும், சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் திமுக அரசுக்கு எதிராக இன்று சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில், அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு நேரில் சென்று பிரேமலதா ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் திமுக அரசை விமர்சித்து பேசினார்.
பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:- கள்ளக்குறிச்சியில் உண்மை நிலவரம் தெரிய வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை வேண்டும். ஏனென்றால் கள்ளக்குறிச்சி ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே அதற்கு உடந்தையாக இருக்கிறார்கள். கள்ளச்சாராயம் காய்ச்சுவதில் இருந்து இந்த அளவுக்கு உயிர் சேதம் ஏற்படுவதற்கு திமுக அரசே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். அமைச்சர் முத்துசாமி சொல்கிறார் காலையில் முழித்ததும் குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொல்லக்கூடாது என்று ஒரு புதிய விளக்கத்தை கொடுக்கிறார்.
காலையிலேயே குடிக்கிறவர்களை குடிகாரர்கள் என்று சொல்லாமல் பிறகு எப்படி சொல்ல வேண்டும். அமைச்சர் முத்துசாமிக்கு உண்மையாகவே மனசாட்சி இருந்தால் கள்ளக்குறிச்சியில் 61 பேர் பலிக்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இது தான் மக்களுக்கு நீங்கள் செய்யும் நியாயமாக இருக்கும். சிபிஐ விசாரணை வேண்டும்.
மேலும் 40க்கு 40 ஜெயித்துவிட்டோம். அதனால் தான் பொறாமையில் இப்படி செய்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். 40க்கு 40 வெற்றி பெற்றதால் நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள். கேண்டீனுக்கு தான் போகப்போறீங்க.. திரும்ப தமிழ்நாட்டுக்கு வரப்போறீங்க.. இது தானே நடந்துகொண்டு இருக்கிறது. சும்மா 40க்கு 40.. அடுத்த 200க்கு 200 என சொல்கிறீர்கள்.
அடுத்த தலைமுறையை பற்றி திமுக யோசிக்கிறதே கிடையாது. அடுத்த தேர்தலை பற்றி தான் அவர்களது யோசனை. இன்றைக்கு நிறைய இளைஞர்களுக்கு வேலையே இல்லை. வேலைவாய்ப்பு இல்லை. எங்காவது நீங்கள் வேலைவாய்ப்பு உருவாக்கியிருக்கிறீர்களா. எதற்கெடுத்தாலும் பணத்தை கொடுத்து சரிகட்டி விடுகிறார்கள். விபத்தில் இறாந்தால் 3 லட்சம், சாராயம் குடிச்சு இறந்துட்டாங்களா உடனே 10 லட்சம்.. இப்படி எதற்கெடுத்தாலும் பணத்தை கொடுத்து சரிகட்டி விடுகிறார்கள். 2026 ஆம் ஆண்டில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும். மகத்தான வெற்றியை நாங்கள் பெறுவோம். இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுகவினருக்கு தொடர்பு இருக்கிறது என்றும் எனவே சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் இது தொடர்பாக ஆளுநர் ரவியை சந்தித்து மனு கொடுத்தார். இதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் இது தொடர்பாக ஆளுநரை சந்தித்து மனுவும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications