அதிமுகவுக்கு காத்திருக்கு கடும் நெருக்கடி.. எங்கே போய் சிக்கியிருக்கு பாருங்க
Recommended Video

சென்னை: திருவாரூர் தொகுதியில் வெற்றி பெறுவது என்பது அதிமுகவுக்கு இமாலய இலக்காக மாறியுள்ளது.
கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1962 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதி திமுக வின் கோட்டையாக விளங்கி வருகிறது.

இரட்டை தலைமை
எம்ஜிஆர் ஜெயலலிதா போன்றவர்கள் அதிமுகவில் தலைமை வைத்தபோதுகூட தொகுதியை அதிமுகவால் கைப்பற்ற முடியவில்லை. இப்போது அதிமுகவுக்கு பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான இரட்டை தலைமை உள்ளது. தினகரன் தனியாக பிரிந்து செயல்படுகிறார். இது அதிமுக வாக்குகளைதான் மேலும் பதம் பார்க்கும்.

அதிமுகவுக்கு ஆதரவு
அப்படியானால், ஆர்.கே.நகரை போல தினகரன் வாக்குவேட்டை ஆடுவாரா என்ற கேள்வி எழலாம். ஆனால் முன்பு அதிமுகவிலிருந்து தினகரன் நீக்கப்பட்டதாக ஜெயலலிதா அறிவித்த காலகட்டங்களில் கூட தேர்தல் நேரங்களில் அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளில் ஈடுபடுவது தினகரன் வழக்கம் என்று உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள். நீக்கம் எல்லாம் வெளி உலகத்துக்கு மட்டும்தான். களத்தில் அதிமுக கொடியை கட்டிய கார்களுடன்தான் தினகரனும் அவர் ஆதரவாளர்களும் வலம் வந்து தேர்தல் பணியாற்றுவார்களாம்.

திமுக அதிக வெற்றி
என்னதான் முயன்றாலும், இதுவரை அதிமுக வென்றது மட்டும் கிடையாது. திமுக 1971, 1977, 1996, 2001, 2006, 2011, 2016ம் ஆண்டுகளில் மொத்தம் 7 முறை இந்த தொகுதியில் வென்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 1967, 1980, 1984, 1989, 1991 ஆகிய தேர்தல்களில் 5 முறை வெற்றி பெற்றுள்ளன. இப்போது, அதிமுக வாக்குகள், இரு அணியாக பிரியும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால் திமுகவின் வெற்றி மேலும் எளிதாகும் என கூறுகிறார்கள்.

ஆர்.கே.நகர் தோல்வி
லோக்சபா தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், இந்த இடைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றேயாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆர்.கே.நகரில் அதிமுக தோற்ற வடுவே இன்னும் ஆறாத நிலையில், திருவாரூர் தொகுதி இடைத் தேர்தல் அந்த கட்சிக்கு பெரும் அக்னி பரிட்சையாக மாறியுள்ளது. ஆளும் கட்சிகள்தான் இடைத் தேர்தலில் வெற்றி பெறும் என்ற நிலையை அதிமுக, ஆர்.கே.நகரில் அடைந்த தோல்வி மாற்றியமைத்ததால், அக்கட்சி தலைவர்கள் எச்சரிக்கையோடு உள்ளனர். அதிமுக எம்.பி. தம்பிதுரை அளித்த பேட்டியும் இதை மெய்ப்பிப்பதாக உள்ளது. திருவாரூர் தொகுதி தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications