ஒரே அறிக்கை.. 2 லட்டு.. மனசெல்லாம் மகிழ்ச்சியில் அதிமுக.. இனிதான் எடப்பாடியார் அதிரடி ஆரம்பம்
சென்னை: ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற அறிவிப்பு வெளியானதும், வெளியே சொல்லிக்கொள்ள முடியாத அளவுக்கு, மனதிற்குள் மத்தாப்பு கொளுத்திக் கொண்டு, மானாவாரியாக மகிழ்ச்சியில் இருக்கக்கூடிய ஒரு கட்சி எது தெரியுமா சாட்சாத்.. ஆட்சியில் இருக்கும் அதிமுகதான்.
ரஜினிகாந்த் கட்சி துவங்கியதும், திமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சில அரசியல் பார்வையாளர்கள் கருதினர். இது வெளிப்படையாக வைக்கப்பட்ட ஒரு விமர்சனம். ஆனால் திரைமறைவில் அதிகமாக ஆட்டம் கண்டு இருந்தது அதிமுக தரப்புத்தான் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
அதிமுக, ரஜினியின் வருகையால் அதிர்ச்சி அடைந்ததற்கு, இரண்டு காரணங்கள் உண்டு. ரஜினியை முன்வைத்து பாஜக குடைச்சல் கொடுத்து ஒருபக்கம், ரஜினியால் திமுகவை விடவும் தங்கள் ஓட்டுவங்கிதான் அதிகம் பாதிக்கப்படும் என்ற களநிலவரம் மற்றொரு பக்கம்.

திடீர் மாற்றம்
உடல் நலக்குறைவு இருந்தாலும் கூட, தான் கொடுத்த வாக்கை மீற மாட்டேன் என்றும், கட்சியைத் தொடங்கப் போவது உறுதி என்றும் ரஜினிகாந்த் அறிவித்தது முதலே பாஜக தலைவர்கள் சிலரின் செயல்பாடுகள் மொத்தமாக மாறிவிட்டது. சாட்சாத் அமித்ஷா முன்னிலையில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டு இருந்தாலும் கூட, திடீரென தமிழக பாஜக தலைவர்கள், அபஸ்வரம் பாடத் தொடங்கினர். அங்கே கை வைத்து, இங்கே கை வைத்து.. அதிமுக அடி மடியில் கை வைக்கும் அளவுக்கு சில பாஜக தலைவர்கள் போய்விட்டனர்.

பாஜக தலைவர்கள்
ஆமா..ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக ஒருமனதாக தங்கள் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று அறிவித்த பிறகும் கூட, ஒரு சீட்டில் கூட வெற்றி பெறாத பாஜக அதை எதிர்த்து பேசியது. "அதெல்லாம் முடியாது.. தேசிய ஜனநாயகக் கட்சியின் கூட்டணியில் உள்ள கட்சிகளை கூப்பிட்டு தான் முடிவெடுக்க வேண்டும்" என்று பாஜக தலைவர்கள் கூற ஆரம்பித்தனர்.

பகிரங்க பேச்சு
அதிமுகவுக்கு மட்டும்தான் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளரே தவிர பாஜக கூட்டணிக்கு கிடையாது என்று பாஜக தலைவர் முருகன் வானதி சீனிவாசன் போன்றவர்கள் பகிரங்கமாக அறிவிக்கும் அளவுக்கான நிலைமை உருவாக காரணம் ரஜினிகாந்த் வருகைதான் என்கிறார்கள். ரஜினிகாந்த் தனித்துப் போட்டியிட்டு குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அதிமுக கூட்டணி ரஜினிகாந்துடன் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும் நிலைமை ஏற்படக்கூடும் என்பது இந்த குடைச்சலுக்கு ஒரு காரணம்.

ரூட் கிளியர்
அதிமுகவை கழட்டிவிட்டு ரஜினிகாந்துடன் கூட்டணி வைத்துக்கொண்டு அதிமுக தலைவர்களுக்கு பல்வேறு குடைச்சல்களை பாஜக கொடுக்கக் கூடும் என்ற அச்சம் மற்றொரு பக்கம் இருந்தது. இப்போது ரூட் கிளியர் ஆகி விட்டது. அதிமுகவை விட்டால் பாஜகவுக்கு இப்போது வேறு வழியில்லை. இவ்வளவு நாள் அவர்கள் பிடித்து வைத்திருந்த குடுமி, இப்போது இவர்கள் கைக்கு மாறப் போகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

எடப்பாடியார்தான் கிங்
எனவே இனி எடப்பாடி பழனிச்சாமிதான் அதிமுக கூட்டணியின் கிங். அவர் அடித்து ஆடுவதுதான் அதிரடி என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். வெளியேயிருந்து மட்டுமல்ல, கட்சியின் 'உள்ளேயிருந்தும்' எடப்பாடி பழனிச்சாமி தலைமைக்கு எதிராக குரல்கள் எழும்பும் வாய்ப்பு இனி ரொம்பவே குறைவு. எனவே இனி எடப்பாடி பழனிச்சாமிக்கு தலைவலி இல்லை.

அதிமுகவிற்கு இரண்டு லட்டு
அடுத்த காரணம் முக்கியமானது. எம்ஜிஆர், அதற்கு பிறகு ஜெயலலிதா ஆகிய இருவருமே திரையில் இருந்து வந்தவர்கள். அதிமுக தொண்டர்கள் ஆரம்பம் முதலே திரை பிம்பங்களுக்கு ஓட்டு போட்டு பழக்கப்பட்டவர்கள். எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் திரைப் பின்புலம் இல்லாதவர்கள். எனவே புதிய தலைமையை ஏற்பதில் பல தொண்டர்களுக்கும் முழுமையான திருப்தி இருக்குமா என்று சொல்ல முடியாது. ரஜினிகாந்த் போன்ற ஒரு திரை ஆளுமை கட்சி துவங்கும் போது, திரை பிம்பத்திற்கு பழக்கப்பட்ட அதிமுக ஓட்டுக்கள் அந்தப் பக்கம் போக வாய்ப்பு இருந்தது. இப்போது அந்த ரூட் கிளியர் ஆகி விட்டது. எனவே கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா என்ற மன நிலையில் அதிமுக பூரித்துப் போய் இருக்கிறது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications