பட்டுனு துப்பாக்கியை காட்டி மிரட்டிய அதிமுக நிர்வாகி.. வீடியோ பரவிய நிலையில் அதிரடி கைது!
கடலூர்: கடலூர் அருகே கை துப்பாக்கியுடன் தகராறில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லிக்குப்பம் அருகே செம்மண் குவாரி விவகாரத்தில் எதிர் தரப்பினரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய அதிமுக ஐடி நிர்வாகி கோபாலிடம் இருந்து துப்பாக்கி மற்றும் குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விலங்கல்பட்டு கிராமத்தை அடுத்து உள்ளது குழந்தைக்குப்பம். குழந்தைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 60), கடலூர் மேற்கு அதிமுக ஒன்றிய விவசாய அணி துணைச் செயலாளராக உள்ளார். அவரது மகன் கோபால் (வயது 36), கடலூர் கிழக்கு அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளராகச் செயல்பட்டு வருகிறார்.

கிராவல் குவாரி நடத்தி வரும் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மகன் கோபாலுக்கும் அதே பகுதியை சேர்ந்த அதிமுக ஒன்றிய செயலாளர் கொஞ்சிகுப்பம் வினோத்துக்கும் இடையே கிராவல் குவாரி நடத்துவது சம்பந்தமாக இருவருக்கிடையே அடிக்கடி போட்டி ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று வினோத் தன் ஆதரவாளர்களுடன் குழந்தைகுப்பம் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மகன் கோபால் ஆகியோரின் குவாரி பகுதியில் புகுந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதில் கிருஷ்ணமூர்த்தி மகன் கோபால் தான் வைத்திருந்த கை துப்பாக்கியை கையில் எடுத்து மிரட்டி உள்ளார். லைசன்ஸ் பெற்ற கைத்துப்பாக்கி என்ற போதிலும் பொதுவெளியில் எடுத்து அதை பயன்படுத்துவது சட்ட விரோதமானது. இந்த நிலையில் அதிமுகவினர் இரு பிரிவுகளாக தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கை துப்பாக்கியை காட்டி மிரட்டுவதையும் உடன் இருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்த நிலையில் அந்தக் காட்சிகள் தற்போது வைரலாக வலம் வருகிறது.
இந்நிலையில் பிஸ்டலை காட்டி எதிர்தரப்பினரை மிரட்டி தாக்கியது சம்பந்தமாக நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications