‘அம்மாவை’ பத்தி பேசிட்டாரு..அண்ணாமலையை டார்கெட் செய்யும் அதிமுக தலைகள்! காலையிலிருந்து அட்டாக் தான்!
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு இந்துத்வா வாதி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளதால் கொந்தளிப்பில் உள்ளனர் அதிமுகவினர். காலையில் இருந்து அண்ணாமலைக்கு கண்டனம் பறந்து வரும் நிலையில் தற்போது அந்த பட்டியலில் இணைந்துள்ளார் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான ஜெயக்குமார்.
இன்று மக்களவைத் தேர்தலில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் இருக்கும் நிலையில் டெல்லியில் நேற்று முன்தினம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசினார்.

அப்போது தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை பாஜக நிரப்பி வருகிறது. ஜெயலலிதா தனது இந்து அடையாளத்தை காட்டினார். அவர் மிகச்சிறந்த இந்துத்துவா வாதியாக இருந்தார். அதிமுக ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இந்துத்துவா கொள்கைகளில் இருந்து விலகிச் சென்று விட்டது.
அண்ணாமலை: இதனால் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்கள் பாஜக பக்கம் வந்துவிட்டார்கள். இதனால் பாஜக தமிழகத்தில் பெரிய இடத்தை பிடித்தது என பேசியிருந்தார். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுக தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதற்கு ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலா, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் கடும்கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது அண்ணாமலையை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார்.
ஜெயகுமார்: இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ஜாதி-மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவருக்குமான தலைவராகத் திகழ்ந்த மாண்புமிகு அம்மா அவர்களை, ஒற்றை மதவாதத் தலைவர் போல் சித்தரித்து அவதூறு பரப்பும் அண்ணாமலைக்கு கடும் கண்டனம்.. மாண்புமிகு அம்மா அவர்கள் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். இந்து, இஸ்லாம். கிறிஸ்தவம் உள்ளிட்ட மற்ற மதங்களுக்குப் பொதுவாகத் திகழ்ந்தவர். மதத்தினரையும் சமமாக மதித்தவர். அனைத்து
கடும் கண்டனம்: பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நாட்டில் பல மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றது. தமிழ் நாட்டில் எந்தவித வன்முறைக்கும் இடம் அளிக்காமல் தமிழ் நாட்டை அமைதிப் பூங்காவாக திகழச் செய்தவர் மாண்புமிகு அம்மா அவர்கள். பா.ஜ.க. மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று, மாண்புமிகு அம்மா அவர்கள் மீது அவதூறு பரப்பும் நோக்கில், ஒற்றை மதவாதத்தைச் சார்ந்த தலைவர் போல பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எல்லோரும் எல்லாமும்: புரட்சித்தலைவர் வழியில், "எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்- இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்ற திராவிடக் கோட்பாட்டின் அடிப்படையில் பொற்கால ஆட்சி தந்தவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள். மாண்புமிகு அம்மா அவர்கள், தமது ஆட்சிக் காலத்தில் முதன்முதலாக திருக்கோயில்களில் அன்னதானத் திட்டத்தை துவக்கி வைத்தார்கள். புனித ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி வழங்கும் திட்டம் 2001ம் ஆண்டு மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் துவக்கப்பட்டது.
நிதி அதிகரிப்பு: புதிதாக வக்ஃபு நிறுவன மேம்பாட்டு நிதி உருவாக்கப்பட்டு, 3 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது. வக்ஃபு வாரியத்திற்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியம் அம்மா அவர்களால் 1 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. மாண்புமிகு அம்மா அவர்கள், தமது ஆட்சிக் காலத்தில்தான் கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமான, ஜெருசலம் சென்று வருவதற்கு, அரசு நிதி உதவி அளிக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்கள்.
சமரசம் இல்லை: மாண்புமிகு அம்மா அவர்கள், அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களை பாதுகாப்பதிலும், அவர்களின் நம்பிக்கைகளை மதித்துப் போற்றுவதிலும், எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி உறுதியாக இருந்திருக்கிறார்கள். தமிழ் நாடு அரசியல் உள்ளவரை அனைத்து மக்களுக்கும் பொதுவான தலைவராம் மாண்புமிகு அம்மா அவர்களின் நெடும்புகழ் அவ்வண்ணமே நிலைத்து நிற்கும்.
இந்துத்வா: திரு. அண்ணாமலை அவர்கள், தனது சொந்த அரசியல் லாபத்திற்காகவும், தமிழ் நாட்டில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் மாண்புமிகு அம்மா அவர்கள் இந்து மதத்தை மட்டுமே சார்ந்தவர் என்று, அவரது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் வேண்டுமென்றே பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்திற்குரியது.” என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications