40 தொகுதிகளிலும் 'அதிமுக' வெல்லும்- நாங்க அடிமை இல்லை- அமித்ஷாவுக்கு எதிராக எடப்பாடி பகிரங்க பதிலடி!
சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெல்லும்; அதிமுக யாருக்கும் அடிமை இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜக 25 தொகுதிகளில் வெல்லும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதற்கு எடப்பாடி பழனிசாமி இந்த பதிலடியை கொடுத்துள்ளது அதிமுக- பாஜக கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான பணிகள், பிரசாரங்களை நாடு தழுவிய அளவில் அனைத்து அரசியல் கட்சிகளும் முன்னெடுத்து வருகின்றன. அண்மையில் தமிழ்நாடு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் தென்சென்னை, வேலூர் லோக்சபா தொகுதிகளை இலக்கு வைத்து ஆலோசனை, பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தமிழ்நாட்டில் பாஜக 25 தொகுதிகளில் வெல்லும் என அறிவித்தார்.

அதிமுக- பாஜக கூட்டணியில் பாஜக, தன்னிச்சையாகவே 25 தொகுதிகளில் வெல்லும் என அறிவித்ததை அதிமுக தலைவர்கள் அதிர்ச்சியுடனே பார்த்தனர். தமிழ்நாடு மற்றும் புதுவையில் மொத்தமே 40 தொகுதிகள்; இதில் பாஜக வெல்லக் கூடியதாக 25 தொகுதிகள் எனில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும்? பாஜக விரும்பக் கூடிய அத்தனை தொகுதிகளையும் தாரைவார்த்து கொடுத்துவிட்டு அதிமுக சிங்கிள் டிஜிட் இடத்தில்தான் போட்டியிடுமா? என சர்ச்சை எழுந்தது. அதேநேரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்ததும் ஏற்கனவே இருந்த அதிமுகவினரின் அதிருப்தியில் பெட்ரோல், டீசலை ஊற்றியதைப் போல ஆகிவிட்டது. அத்தனை அதிமுக தலைவர்களும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தனர்; பாஜகவினரோ அதிமுகவினரை இழிவாக விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இந்த நிலையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, 25 தொகுதிகளில் பாஜக வெல்லும் என அமித்ஷா சொல்லி இருக்கிறாரே? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு- புதுவையில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதுதான் அதிமுகவினர் மனநிலையாக உள்ளது என்றார். மேலும் 25 தொகுதிகளில் பாஜக வெல்லுவோம் என்பது அமித்ஷாவின் தனிப்பட்ட கருத்து என்றும் சுட்டிக்காட்டினார் எடப்பாடி பழனிசாமி.
அத்துடன் அதிமுக என்பது யாருக்கும் அடிமை கிடையாது; கொள்கை அடிப்படையில்தான் அதிமுக கூட்டணி அமைக்கிறது. இந்த கூட்டணி என்பது அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப அமைக்கப்படும். அதிமுக மக்கள் பிரச்சனைகளைப் பேசுகிறது எனவும் கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிகாரப்பூர்வமான பேட்டியில் 2 முக்கிய விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. ஒன்று தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி; அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி; அதிமுகதான் கூட்டணிக்கு தலைமை வகிக்கும்; அதிமுக யாருக்கும் அடிமை இல்லை என்பது. இதன்மூலம் பாஜக தலைமையில்தான் லோக்சபா தேர்தலில் கூட்டணி என்கிற பாஜகவினர் கருத்தை அதிமுக திட்டவட்டமாகவே நிராகரித்துள்ளது. அதேபோல பாஜக நினைக்கிற எண்ணிக்கையிலான தொகுதிகளை எல்லாம் அதிமுக தரப்போவதும் இல்லை; அதிமுக கொடுக்க நினைக்கும் தொகுதிகளைத்தான் பாஜக பெற முடியும் என்பதான ஒரு நிலையைத்தான் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். இந்த நிலைப்பாட்டை பாஜக ஏற்காமல் போனால் அதிமுக- பாஜக கூட்டணி உடையத்தான் சாத்தியம் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications