திடீரென பேசிய ஜெ.வின் நிழல்! சண்டை போடாதீங்க.. கட்சியைக் காட்டிக் கொடுக்குறாங்க! அதகள அதிமுக!
சென்னை: அதிமுக தலைவர்கள் பிரிந்திருக்கும் வேளையில் ஒருவரை ஒருவர் வசைப்பாடிக் கொண்டிருக்கிறார்கள் எனவும், அவர்கள் இருக்கும் இடத்திற்கு விசுவாசமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று நினைக்கும் அதே வேளையில் இவர்கள் இயக்கத்தை காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது என அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றன் விமர்சித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் உதவியாளர் தான் பூங்குன்றன். ஜெ.வின் நிழல் போல் அவருடனேயே இருந்தவர். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு முழுமையாக கட்சி நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கியுள்ள அவர், தமிழகம் முழுவதும் ஆன்மீக பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில்," கழகம் காக்கப்பட வேண்டும்; கழகம் வலிமை பெறவேண்டும்; கழகம் வெற்றி பெறவேண்டும் என்பதுதான் நம் அனைவருடைய எண்ணமும். இன்று எண்ணங்களால் நீங்கள் பிரிந்திருந்தாலும் நம்முடைய இலக்கு ஒன்றுதான்.
2026 ஆம் ஆண்டு கழகம் புரட்சித்தலைவருடைய பொற்கால ஆட்சியை, புரட்சித்தலைவியின் வழியில் அமைக்க வேண்டும். அதற்காக ஒவ்வொரு தொண்டனும் ஏங்கிக் கொண்டிருக்கின்றான். இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கின்றான். உழைத்துக் கொண்டிருக்கின்றான். இன்று தலைவர்கள் பிரிந்திருக்கும் வேளையில் ஒருவரை ஒருவர் வசைப்பாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இருக்கும் இடத்திற்கு விசுவாசமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று நினைக்கும் அதே வேளையில் இவர்கள் இயக்கத்தை காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
நாளடைவில் இவர் எவ்வளவு சம்பாதித்து இருக்கிறார். அவர் இவ்வளவு சம்பாதித்து இருக்கிறார்; இவர் வீட்டில் என்ன நடந்தது. அவர் வீட்டில் என்ன நடக்கிறது; இவர் கட்சிக்காக என்ன செய்தார். அவர் தொண்டர்களுக்காக என்ன செய்தார்; அவர் அப்ப என்ன பேசினார். இவர் இப்ப என்ன பேசுகிறார் என்று பட்டியல் போட்டு காண்பிப்பார்கள் போல..! வேதனை!
இயக்கத்தின் மீதும், கொண்ட தலைமையின் மீதும் விசுவாசம் கொண்டவர்கள் பலர் இன்றும் அமைதி காத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் வசைபாடிக் கொண்டிருப்பதை பார்க்கும் போது மனமெல்லாம் அனலில் இட்ட புழுவாய் துடிக்கிறது. தயவுசெய்து வசைபாடுவதை நிறுத்திவிட்டு நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கத்தை வலிமைப்படுத்த முயற்சியுங்கள். கழகம் வலிமையாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தொண்டனுடைய விருப்பம். அது நிறைவேற பாடுபடுங்கள் என்று உங்களை சிரம் தாழ்ந்து வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
இதோ! நமக்கு வாழ்வளித்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய 77வது பிறந்தநாள் வரும் பிப்ரவரி 24ம் தேதி வருகிறது. அன்னமிட்ட கையால் ஆசீர்வதிக்கப்பட்டு, அன்னபூரணியாய் திகழ்ந்த நமது புரட்சித்தலைவியினுடைய பிறந்தநாளை ஒவ்வொரு தொண்டனும் கொண்டாட வேண்டும். தன்னால் இயன்ற உதவியை இல்லாதவருக்கு செய்து நன்றி கடன் செலுத்த வேண்டும். 'திருக்கோயில் அன்னதானம்' இன்று பலரை பசிப்பிணியில் இருந்து குணப்படுத்திக் கொண்டிருக்கிறது. 'அம்மா உணவகம்' பலரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இப்படி மறைந்தும், பசியால் வாடுபவர்களின் உள்ளங்களை அன்னத்தால் மகிழ்விக்கின்ற தாயின் பிறந்தநாளை உற்சாகத்தோடு நாம் கொண்டாட வேண்டும். இவர்கள் அல்லவா புரட்சித்தலைவியின் உண்மையான தொண்டர்கள் என்று மக்கள் நம்மைப் போற்றிப் புகழவேண்டும்.
உடன்பிறப்புகளுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்! தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள அனாதை ஆசிரமங்கள், முதியோர் இல்லங்கள், சிறுவர் இல்லங்கள் போன்ற அமைப்புகளுக்கு உடன்பிறப்புகளோடு, நண்பர்களோடு, குடும்பத்தினரோடு சேர்ந்து ஒரு மூட்டை அரிசியோ இல்லை உங்களால் முடிந்த அளவு அரிசியோ வாங்கித் தாருங்கள் அல்லது ஒருவேளை உணவளியுங்கள். அது இந்த கட்சியை உயிராய் நினைத்து வெந்த உள்ளத்திற்கு மருந்தாக இருக்கும். நீங்கள் செய்த உதவியை உங்கள் முகநூலிலும் மற்ற சமூக ஊடகங்களிலும், நண்பர்களுக்கும், நீங்கள் சார்ந்த இயக்கத்தினுடைய பத்திரிகைகளுக்கும் தெரியப்படுத்துங்கள். நீங்கள் இன்று வெவ்வேறு தலைமையின் கீழ் பணிபுரிந்தாலும் உங்களில் ஓடுவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ரத்தம் தான் என்பதை செயலில் காட்டுங்கள்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications