அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக-டெல்டாவில் ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து பயணம்-ஹேப்பி அதிமுக
சென்னை: அதிமுகவில் எதிரும் புதிருமாக இருந்து சர்ச்சைகளுக்கு தீனி போட்டு வந்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) இருவரும் டெல்டா மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை இணைந்து பார்வையிட்டனர். இது அதிமுகவினர் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி போர்க்கொடி தூக்கினார் ஓபிஎஸ். அவருக்கு ஆதரவாக தென்மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அணி திரண்டனர். அதிமுகவில் சேர்க்கவே கூடாது என சசிகலாவுக்கு எதிராக இபிஎஸ் அணி உறுதியாக இருந்தது. இதனால் அதிமுகவில் கோஷ்டி பூசல் உச்சகட்டத்தை எட்டியது.

கை கோர்த்த ஓபிஎஸ்- இபிஎஸ்
மேலும் மழை வெள்ள பாதிப்புகளை கூட இரு அணிகளுமே தனித்தனியாக பார்வையிட்டு போட்டி போட்டு நிவாரண உதவிகளை வழங்கி வந்தனர். இந்த நிலையில் திடீரென ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்து மழைவெள்ள பாதிப்புகளை பார்வையிட்டது அதிமுகவினரை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

நாகையில் ஆய்வு
நாகை மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெக்டர் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் மழை வெள்ளப் பாதிப்புகளை கடந்த 13-ந் தேதி ஆய்வு செய்துவிட்டு சென்றார். இந்த நிலையில் நாகை மாவட்டம் கருங்கண்ணி கிராமத்தில் மழை வெள்ளப்பாதிப்புகளை ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் இன்று இணைந்து நேரில் பார்வையிட்டனர். அப்போது மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்களின் பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை இருவரும் வழங்கினர். இந்த ஆய்வின் போது முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், ஜெயபால் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மயிலாடுதுறையில் ஓபிஎஸ்,இபிஎஸ் ஆய்வு
மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியது. கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்களிடம் விவசாயிகள் அழுகிய நிலையில் உள்ள பயிர்களை பிடுங்கி காண்பித்து வேதனை தெரிவித்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் இருவரிடமும் விளக்கினார். தொடர்ந்து கன மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 175 குடும்பத்தினருக்கு அரிசி, பாய், போர்வைகள் அடங்கிய தொகுப்பினை நிவாரண உதவியாக வழங்கி இருவரும் ஆறுதல் தெரிவித்தனர். இதில் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் பாரதி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் ராதாகிருஷ்ணன், சக்தி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

திருவாரூரில் ஆய்வு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த ராயநல்லூர் மற்றும் புழுதிகுடி ஆகிய பகுதிகளில் மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு கூடியிருந்த விவசாயிகளை நேரில் சந்தித்து பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர். பின்னர் கன மழையினால் வீடுகளை இழந்த அப்பகுதி பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு பாய், போர்வை, அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் அடங்கிய 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இருவரும் வழங்கினர். இந் நிகழ்வில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் அதிமுக மாவட்ட ஒன்றிய நகர பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

உற்சாக வரவேற்பு
முன்னதாக நாகப்பட்டினத்தில் பாதிப்புகளை பார்வையிட செல்லும் வழியில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே அதிமுகவினர் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் உற்சாகமாக வரவேற்றனர். காரைக்கால் மாவட்ட அதிமுக செயலாளர் ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. அசனா உள்ளிட்ட 200க்கு மேற்பட்ட அதிமுகவினர் இதில் கலந்து கொண்டு பூங்கொத்து கொடுத்து அவர்களை வரவேற்றனர். அப்போது அதிமுகவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பி இருவரையும் வழியனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications