“கை வலிக்குது”.. சட்டப்பேரவையில் அதிமுக MLA குரல்! நையாண்டி செய்யக்கூடாது என கண்டித்த துரைமுருகன்!
சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி எழுப்ப கை தூக்கினால் கை வலிக்கிறது என்று அதிமுக எம்.எல்.ஏ ரவி கூறினார். கை தூக்காமல், பட்டன் அமைப்பு முறை தர வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, பட்டன் அமைப்பு முறை குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. மானியக் கோரிக்கை விவாதங்களைத் தொடர்ந்து துறை அமைச்சர்கள் பதில் அளித்தும், முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டும் வருகின்றனர். முன்னதாக கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

ராஜன் செல்லப்பா கேள்வி
இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று பேசிய அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, சட்டப்பேரவை கணினிமயமாகிக் கொண்டிருக்கிறது. சட்டப்பேரவையில் கேள்வி எழுப்ப கை தூக்கினால் கை வலிக்கும் என்பதால் கை தூக்காமல், பட்டன் அமைப்பு முறை தர வேண்டும், பட்டன் அமைப்பு முறை ஏற்படுத்தப்படுமா? என்று ராஜன் செல்லப்பா பேரவையில் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, அவரது கேள்விக்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, பட்டன் அமைப்பு முறை குறித்து முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.
கணினிமயம்
மேலும், தற்போது கணினி முறையில் எல்லாமே செய்யப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார். சட்டசபை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணையதளத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
சட்டசபை நடவடிக்கை குறிப்பு புத்தகங்கள், குழுக்களின் அறிக்கைகள், சபையில் வைக்கப்பட்ட ஏடுகள், வெளியீடுகள், புகைப்படங்கள், செய்தி துணுக்குகள், வீடியோ துணுக்குகள் உள்ளிட்ட அனைத்தையும் நவீன முறையில் கணினிமயமாக்கம் செய்யும் பணி, மின் ஆளுமை முகமை மேற்பார்வையில் சட்டசபை செயலகத்தில் நடந்து வருகிறது.
முதல் கட்டமாக, 1952 முதல் 2024 ஆம் ஆண்டு வரை, சட்டசபை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட tnlasdigital.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த இணையதளத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
கை வலிக்குது - அரக்கோணம் எம்.எல்.ஏ ரவி
மேலும், சட்டப்பேரவையில் இன்று, அரக்கோணம் அதிமுக எம்.எல்.ஏ. ரவி, கேள்வி கேட்பதற்காக கையை தூக்கித் தூக்கி கை வலிப்பதாக சபாநாயகரிடம் தெரிவித்தார். அதற்கு சபாநாயகர் அப்பாவு, "ரவி.. இப்படியெல்லாம் பேசக்கூடாது. கை சுகமாகட்டும், அப்புறம் அழைக்கிறேன்" எனக் கூறினார்.
துரைமுருகன் பதில்
இதையடுத்து எழுந்த அவை முன்னவர் துரைமுருகன், "கேள்வி நேரத்தில் துணைக் கேள்வி கேட்பதில் தவறில்லை. அதற்காகத்தான் கேள்வி நேரம் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் அவை மரபை காத்து பேச வேண்டும், நையாண்டி செய்யக் கூடாது" என்று கண்டிக்கும் வகையில் பேசினார்.












Click it and Unblock the Notifications