தப்பியது சபாநாயகர் அப்பாவு பதவி! எதிராக 63, ஆதரவாக 154.. அதிமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
சென்னை: அப்பாவுவை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கக்கோரி அதிமுக எம்.எல்.ஏ உதயகுமார் கொண்டு வந்த தீர்மானம் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். விவாதம் முடிந்தபிறகு குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை பேரவை செயலரிடம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடந்த ஜனவரி மாதம் வழங்கி இருந்தார். 'சட்டப்பேரவையில் அதிமுகவினர் அதிக நேரம் பேச அப்பாவு அனுமதிப்பது இல்லை. அதிமுகவினர் பேசுவதை ஒளிபரப்புவது இல்லை. பாரபட்சத்துடன் செயல்படும் அவரை நீக்க வேண்டும்' என்று அதில் தெரிவித்திருந்தார்.

கடந்த 14, 15 ஆம் தேதிகளில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில், அந்த தீர்மானம் 17 ஆம் தேதி எடுத்துக் கொள்ளப்படும் என்று அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தின் முடிவில் அப்பாவு தெரிவித்தார். அதன்படி, பேரவை தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.
இன்று காலை அவை நடவடிக்கைகள் தொடங்கியதும், முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது அதைத்தொடர்ந்து கேள்வி நேரம், நேரமில்லா நேரம் இடம்பெற்றது அப்போது, தனது தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடுமாறு ஆர்.பி.உதயகுமார் கோரினார். சபாநாயகரை பதவி நீக்கக் கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்பி உதயகுமார்.
35க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்றதால் தீர்மானம் விவாதத்துக்கு ஏற்கப்பட்டது. தீர்மானம் உடனே எடுக்கப்பட்டு, சபாநாயகர் இருக்கையில் இருந்து அப்பாவு வெளியே சென்றார். அவையை துணை சபாநாயகர் பிச்சாண்டி வழிநடத்தினார். நம்பிக்கையில்லா தீர்மானம் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். சபாநாயகர் பலமுறை ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். பின்னர் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சட்டப்பேரவையில் தற்போது திமுகவின் பலம் 133, அதிமுகவின் பலம் 66 ஆக உள்ளது. போதிய பலம் இல்லாத நிலையில், நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.
இரண்டாம் முறையாகவும் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதிலும் தீர்மானம் தோல்வி அடைந்தது. குரல் வாக்கெடுப்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வி அடைந்ததால், டிவிஷன் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.
அதையடுத்து டிவிஷன் வாக்கெடுப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி 6 பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. டிவிஷன் வாக்கெடுப்பிலும் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது.
சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிராக 63 வாக்குகளும், சபாநாயகர் அப்பாவுக்கு ஆதரவாக 154 பேரும் வாக்களித்துள்ளனர். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்களும் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பாஜக, பாமக எம்.எல்.ஏ -க்கள் நம்பிக்கை இல்லாத் தீர்மான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்துள்ள நிலையில், மீண்டும் இருக்கையில் அமர்ந்து அடுத்த அலுவல் நடவடிக்கைகளை அப்பாவு தொடர்வார்.












Click it and Unblock the Notifications