Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்
சென்னை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இணையாத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சிதான் என அதிமுக மாநிலங்களவை எம்பி இன்பதுரை கிண்டலாக பதிவு போட்டுள்ளார். மேலும் அவரை நிழல் முதல்வர் என்றும் விமர்சித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவிக) மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் சமீபத்திய செயல்பாடுகளும், அதிமுக உள்ளிட்ட பிற அரசியல் கட்சிகள் குறித்த அவரது விமர்சனங்களும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்நிலையில், அவரது இந்த அதிரடி அரசியல் நகர்வுகள் குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் காரசாரமான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, அதிமுக மாநிலங்களவை எம்பி இன்பதுரை பகிர்ந்துள்ள விமர்சனம் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அதில், "அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகள் மற்றும் அதிமுக உள்ளிட்ட பிற அரசியல் கட்சிகள் குறித்து அவர் தெரிவித்து வரும் கருத்துக்களைப் பார்த்தால், அவர்தான் தமிழக வெற்றிக் கழக அரசாங்கத்தின் நிழல் முதலமைச்சர் போலத் தோன்றுகிறது. இதுவரை அவர் இணையாத ஒரே கட்சி 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' மட்டும்தான் போல!" என்று கிண்டலாகக் பதிவிட்டுள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இன்னும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள நிலையிலும், அமைச்சராக இருக்கும் ஆதவ் அர்ஜுனா மற்ற கட்சிகளைத் தொடர்ந்து விமர்சித்து வருவது, அவரே கட்சியின் உச்சகட்ட அதிகார மையமாகச் செயல்படுகிறாரோ என்ற கேள்வியைக் கிளப்பியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அதன் வெளிப்பாடாகவே இத்தகைய கடுமையான மற்றும் நையாண்டி கலந்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் தவெகதான் உண்மையான அதிமுக என்றும் 90 சதவீத அதிமுகவினர் தவெகவில் இணைவார்கள் என தெரிவித்திருந்தார்.
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை மக்கள் தலைவர்களாக உருவாக்கியது போல, மக்கள் முதல்வர் ஜோசப் விஜய்யையும் உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஆதவ் அர்ஜுனாவின் இந்த கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்றும், தொண்டர்கள் என்றும் கட்சியின் பின்னே உறுதியாக நிற்பார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார். அது போல் திமுகவின் பண்ணையார் மனநிலைதான் அதன் தோல்விக்கு காரணம் என்றும் அவர் விமர்சித்திருந்தார்.
சட்டசபை தேர்தலில் வென்ற அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
முக்கியத் தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள்
வெல்லமண்டி என். நடராஜன்: அதிமுக ஆட்சிக்காலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். திருச்சியில் பலத்த செல்வாக்குடைய இவர், தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்தைச் சந்தித்து முறைப்படி கட்சியில் இணைந்தார்.
ஆர். நடராஜ் (முன்னாள் டி.ஜி.பி மற்றும் எம்.எல்.ஏ): சென்னை மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், ஓய்வுபெற்ற டி.ஜி.பி-யுமான ஆர். நடராஜ் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
ஜே.கே.என். இராமஜெயலிங்கம்: ஜெயங்கொண்டம் தொகுதியின் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ).
சாதன் பிரபாகர்: பரமக்குடி தொகுதியின் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்.
கே. கமலகண்ணன்: அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொழிலாளர் அமைப்பான அண்ணா தொழிற்சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்.
தேர்தல் முடிவுகள் வெளியாகி தவெக ஆட்சி அமைத்த சில நாட்களிலேயே, 4 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் அந்த 4 தொகுதிகளும் தற்போது காலியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
புகழேந்தி (முன்னாள் அதிமுக செய்தித் தொடர்பாளர்): தவெக அமைச்சர்களைச் சந்தித்துப் பேசியுள்ள இவர், விரைவில் தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மாற்றத்திற்கான காரணம்: "ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருவதாலும், தவெக தங்களின் கொள்கைத் தலைவர்களான பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை ஏற்றுக் கொண்டுள்ளதாலும், தவெகவை 'உண்மையான அதிமுக'வாகக் கருதி வருகிறோம்" என்று கட்சியில் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து தவெகவிற்கு இந்தத் தொடர் இடப்பெயர்வு நடந்து வருவதால், சென்னை பனையூர் தலைமையகத்தில் வாரந்தோறும் பிற கட்சியினரை இணைக்கும் சிறப்பு நிகழ்வுகள் தவெக தரப்பில் நடத்தப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications