காமராஜரை திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி பேசிய போது காங்கிரசுக்கு ஏன் கோபம் வரலை! இன்பதுரை நறுக்
சென்னை: முன்னாள் முதல்வர் காமராஜரை இழிவுப்படுத்தி திருச்சி சிவா பேசிய போது வராத கோபம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்னதற்கு வருகிறதே என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: காமராஜரை இழிவுபடுத்தி திருச்சி சிவா பேசி வராத கோபம், காமராஜருக்கு சமாதி கட்டியவர்கள் நாங்கள் என R.S.பாரதி முழங்கிய வேளை எழாத ரோஷம், கரூர் காங்கிரசாரை திமுக தூக்கியதும் (ஜோதிமணி அளவுக்கு)வராத ஆவேசம், ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்கிறது என்று EPS பேசியதால் இவருக்கு வருகிறது என்றால்.. என கேள்வி எழுப்பியுள்ளார்.

நீலகிரியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "நெல்லையில் காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோலங்கர் பேசுகிறார். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் திமுக பாதிக்கு பாதி சீட்டு தர வேண்டும் என்று! மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன.
பாதிக்கு பாதி
இதில் காங்கிரஸ் கட்சிக்கு 117 தொகுதிகளை கேட்கிறது. அத்துடன் ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கட்சி கேட்கிறது. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ, அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறாது; அப்படி வெற்றி பெற்றால் எங்களுக்கும் ஆட்சியில் பங்கு வேண்டும் என பேசியிருக்கிறார்.
கூட்டணியில் விரிசல்
ஆக, திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுவிட்டது.. ஆக, ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கோஷம் எழுப்பப்பட்டுவிட்டது. இப்போதுதான் காங்கிரஸ் கட்சிக்கு ஞானோதயம் பிறந்துவிட்டது. திமுக கூடாரம் காலியாகப் போகிறது என்பது தெளிவாக தெரிகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
விமான நிலையம்
இதற்கு பதிலடியாக சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் குறித்து பாஜகவினர் தரக்குறைவாக பேசினார். அப்போது ஏன் எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் வரவில்லை?
ஊழல்வாதி
முன்னாள் ஜெயலலிதா ஊழல்வாதி, ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றவர், அபராதம் செலுத்தியவர் என்றெல்லாம் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை பேசினாரே அப்போதெல்லாம் கோபமே வராமல் கூட்டணிக்கு சென்றிருக்கிறது அதிமுக.
விசுவாசம் எங்கே
எனவே எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு விசுவாசமாக இருக்கிறாரா என்பதை பாருங்கள். காங்கிரஸ் கட்சியை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் தகுதியும் இல்லை என செல்வப்பெருந்தகை விமர்சித்திருந்தார்.

செல்வப்பெருந்தகைக்கு அருகதை இல்லை
இந்த நிலையில் செல்வப்பெருந்தகை குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு எம்பி ஆ.ராசா விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது சுற்றுப்பயணத்தில் நீலகிரி மாவட்டத்தில் பேசும்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையை தரம்தாழ்ந்து, இழிவுபடுத்திப் பேசியிருப்பது கடும் கண்டத்திற்குரியது.
திமுக கூட்டணிக் கட்சிகள் பற்றியும் அதன் தலைவர்கள் பற்றியும் தொடர்ந்து அவதூறுகளை பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை பிச்சைக்காரர் என்றும், ஒட்டுப்போட்ட சட்டைப் போட்டவர் என்றும் பேசி இருப்பது அநாகரிகத்தின் உச்சம். ஒரு தலைவருக்கு உரிய எந்தப் பண்பும் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. நாலாந்தரப் பேச்சாளராக மாறி வருகிறார் என கடுமையாக விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications