சசிகலாவுக்கு அதிமுக ராஜ்யசபா எம்பி விஜயகுமார் ஆதரவு?.. வைரலாகும் பேஸ்புக் பதிவு!
சென்னை: சசிகலாவுக்கு அதிமுக ராஜ்யசபா எம்பி விஜயகுமார் தனது பேஸ்புக்கில் சசிகலா பயன்படுத்திய ஜெயலலிதாவின் காரையும் அந்த காரில் இருந்த கொடி குறித்த போட்டோவையும் பதிவு செய்துள்ளதன் மூலம் அவர் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோரின் தண்டனை உறுதி செய்யப்படுவதற்கு முன்னர் அவர் அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும் அவர் முதல்வராக பதவியேற்பதற்கு முன்னர் தண்டனை உறுதியானதால் முதல்வர் பதவியை ஏற்க முடியவில்லை.
சசிகலா கைது செய்யப்பட்டவுடன் நிலைமை மாறியது, பிரிந்த அதிமுகவை ஒன்று சேர்க்க இனி சசிகலா, தினகரன் உள்ளிட்டோருடன் எந்தத் தொடர்பும் கிடையாது என உறுதியளிக்க வேண்டும் என ஓபிஎஸ் கேட்டு கொண்டவுடன் சசிகலா குடும்பத்தினருடனான அதிமுக நிர்வாகிகளின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

நிர்வாகிகள்
இந்த நிலையில் அவர் 4 ஆண்டுகள் சிறைவாசம் இருந்துவிட்டு தற்போது டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். அவரது வரவால் அதிமுகவில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என எதிர்பார்க்கப்படுகிறது. யாருடைய வருகையும் அதிமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என அதிமுக நிர்வாகிகள் தெரிவித்து வருகிறார்கள்.

வரவேற்பு
சசிகலா ரிலீஸ் தேதியன்று அதிருப்தியாளர்களுக்கு சின்னம்மாவின் நினைப்பே வரக் கூடாது என்பதற்காக அன்றைய தினம் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் திறக்கப்பட்டது. சசிகலா கடந்த 27ஆம் தேதி சிறையிலிருந்து வெளியானவுடன் அதிமுகவினர் சிலர் சசிகலாவை வரவேற்று போஸ்டர்களை ஒட்டியிருந்தனர்.

கண்டனம்
இந்த நிலையில் இன்றைய தினம் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த சசிகலா, ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியிருந்தார். இதற்கு அதிமுக நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சசிகலாவை வரவேற்க ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

சந்தேகம்
இந்நிலையில் அதிமுக மாநிலங்களவை எம்பி விஜயகுமார் தனது பேஸ்புக் பக்கத்தில் ஜெயலலிதா காரையும் அதிலிருந்த அதிமுக கொடியையும் வெளியிட்டிருந்தார். இதனால் விஜயகுமாரும் சசிகலாவுக்கு மறைமுகமாக ஆதரவை தெரிவிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அது போல் அவர் சசிகலா பயணம் செய்த போட்டோவை வெளியிடாததால் சசிகலாவுக்கு அவரது ஆதரவு குறித்து சிறிது சந்தேகமும் எழுகிறது.












Click it and Unblock the Notifications