’சத்தியம்’ செய்யாத குறையாக..எந்த காரணத்தை கொண்டும் பாஜகவுடன் அதிமுக இனி கூட்டணி இல்லை: கேபி முனுசாமி
சென்னை: எந்த ஒரு காரணத்தை முன்வைத்தும் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கவே மாட்டோம் என அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கேபி முனுசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கேபி முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்களோடு கூட்டணியில் இருந்த பாஜகவின் மாநில தலைமை அதிமுக குறித்தும் எங்கள் இயக்கத் தலைவர்களைப் பற்றியும் விமர்சனம் செய்தது. ஜெயலலிதாவை விமர்சனம் செய்ததைக் கண்டித்து அதிமுக ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியது.

அண்ணாமலையின் விமர்சனம்: இதனைத் தொடர்ந்து அண்ணா குறித்தும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்தும் பல்வேறு விமர்சனங்களை தமிழ்நாடு பாஜக தலைமை முன்வைத்தது. இந்த உண்மைக்கு மாறான விமர்சனங்கள் தமிழ்நாட்டில் இருக்கிற அதிமுகவின் 2 கோடி தொண்டர்களை கடுமையாக கோபப்படுத்தியது. இந்த கோபத்தை ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகளிடம் வெளிப்படுத்தினர்.
தொண்டர்கள் கோபம்: இதனைத் தொடர்ந்து அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில் 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளை மாவட்ட கழக செயலாளர்கள், எம்பிக்கள் ,எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் வெளிப்படுத்தி பாஜக தலைமைக்கு ஆட்சேபனை தெரிவித்தனர்.

பாஜக கூட்டணிக்கு குட்பை: இதனடிப்படையில், ஒட்டுமொத்தமாக அனைவரும் ஒன்று சேர்ந்து ஏகமனதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவது என முடிவு செய்தார்கள். 2 கோடி தொண்டர்களின் உணர்வை எங்கள் பொதுச்செயலாளர் ஏற்றுக் கொண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவது என முடிவெடுத்ததை ஏற்றுக் கொண்டார். இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஊடகங்களுக்கும் படித்து காட்டப்பட்டது.
மீண்டும் கூட்டணி என்பது திசை திருப்புவது: ஆனால் ஊடகங்களில் விவாதங்களில் கலந்து கொள்கிற ஊடகவியலாளர்கள், மூத்த அரசியல் விமர்சகர்கள் சிலர், அதிமுக நேரம் வரும் போது மீண்டும் பாஜகவுடன் கூட்டு சேர்ந்துவிடும் என மக்களை திசை திருப்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
திமுகவுக்கு பதற்றம்: திமுக தலைவரான முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் இது நாடகம் என்கின்றனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியதால் ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாக உளறுகின்றனர். இதற்கு முடிவு கட்டத்தான் இன்று செய்தியாளர்களை சந்தித்துள்ளோம்.
மீண்டும் பாஜக அணியில் இணையாது: எந்தக் காரணத்தை கொண்டும் அதிமுக, ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்ட்ணியில் மீண்டும் இணையாது என்பதை தெரிவித்து கொள்கிறோம். லோக்சபா தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தனி கூட்டணி அமையும். அது மிகவும் வலிமையான கூட்டணியாக அமையும்.
அண்ணாமலையை மாற்ற சொல்லவில்லை: அதிமுக மிகப் பெரிய இயக்கம். ஒரு சிறுப்பிள்ளைத்தனமாக ஒரு கட்சியின் மாநில தலைமையை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கவில்லை. அப்படியான ஒரு தவறை நாங்கள் எப்போதும் செய்ய மாட்டோம். ஒரு கட்சி இப்படித்தான் செயல்பட வேண்டும் என நாங்கள் தலையிட்டு சொல்வதற்கு நாகரிகமற்றவர்கள் அல்ல. இவ்வாறு கேபி முனுசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications