12 கேட்காதீங்க.. 3 மட்டும்தான்.. அதுவும் இலையில்தான்.. தமாகா தலையில் குட்டிய அதிமுக.. செம டென்ஷன்!
சென்னை: அதிமுக கூட்டணியில் 12 தொகுதிகள் கேட்ட ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள்தான் ஒதுக்க முடியும் என அதிமுக திட்டவட்டமாக கூறியிருப்பதால் அந்த கட்சி அதிருப்தி அடைந்துள்ளதாம்.
சட்டசபை தேர்தலில் தமாகாவுக்கு அதிமுகதான் ஒரே வாய்ப்பு. ஜிகே வாசனுக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து டெல்லிக்கு அனுப்பி வைத்தது அதிமுக. இதனால் அதிமுக தலைமையிலான கூட்டணியிலேயே தமாகா நீடித்து வருகிறது.
12 தொகுதிகள்
இந்த தேர்தலில் தொடக்கம் முதலே 12 தொகுதிகளை கேட்டு வருகிறது தமாகா. ஆனால் அதற்கான வாய்ப்பு கிஞ்சித்தும் இல்லை என முதலிலேயே கை விரித்துவிட்டது அதிமுக. தற்போதைய நிலையில் அதிகபட்சம் 3 தொகுதிகள்தான் தர முடியும் என்கிறது அதிமுக.
3 தொகுதிகள் - இரட்டை இலை
அதுவும் தமாகாவின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடக் கூடாது; 3 தொகுதிகளிலுமே இரட்டை இலை சின்னத்தில்தான் தமாகா வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாம்.
தமாகா நிர்வாகிகள் கோபம்
இதனால்தான் தமகாவுடனான தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லையாம். தற்போது தேமுதிக, அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்ட சூழலில் 12 தொகுதிகள் ஒதுக்கினால் என்ன? என்பது தமாகா நிர்வாகிகள் கேள்வி.
அதிமுக லாஜிக்
ஆனால் அதிமுகவோ, இன்னும் சின்ன சின்ன கட்சிகள் எல்லாம் கூட்டணிக்கு வரப் போகின்றன. அதனால்தான் குறைவான தொகுதிகள் தருகிறோம் என்று பதில் தருகிறதாம். ஆற்றில் இறங்கிய பிறகு நீரில் மூழ்கி எழுந்திருக்கத்தான் வேண்டும்...இப்போது நட்டாற்றில் நின்று கொன்டிருக்கிறது தமாகா.