சென்னையில் பிரதமர் மோடி முன்னிலையில் அதிமுக பஞ்சாயத்து? ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே சந்திக்க திட்டம்?
சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல் வெடித்திருக்கும் நிலையில் சென்னையில் இன்று இரவு தங்கும் பிரதமர் மோடியை அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனியே சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் அக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. ஓபிஎஸ், இபிஸ் இருதரப்பும் மாறி மாறி கட்சியினரை நீக்கி வருவதால் கடும் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த களேபரத்தில் அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டு பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவால் திறக்கப்பட்டது.

அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு விரும்புகிறது. ஜனாதிபதி பதவிக்காக திரவுபதி முர்மு வேட்புமனுத் தாக்கல் செய்த போது ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார். ஆனால் அப்போது ஓபிஎஸ்-க்கு பிரதமர் மோடி தம்மை சந்திக்க அனுமதி தரவில்லை.
ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்ற போது எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். அப்போதும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க பிரதமர் மோடி, அமித்ஷா சந்திக்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமி தமது டெல்லி பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். மேலும் டெல்லி பாஜக தலைவர்கள் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருப்பதாலே இபிஎஸ்ஸை சந்திக்க மறுக்கின்றனர் என்றும் சில தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வருகிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி இப்போட்டிகளை தொடங்கி வைக்கிறார். இதன்பின்னர் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று இரவு மோடி தங்குகிறார். அப்போது சில முக்கிய பிரமுகர்களை மட்டும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் இன்று தங்கும் பிரதமர் மோடியை ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனியே சந்திக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சந்திப்பின் போது அதிமுகவின் உட்கட்சி மோதல் குறித்து இருதரப்பும் பரஸ்பரம் பிரதமர் மோடியிடம் விவரிக்க உள்ளனராம். பிரதமர் மோடி தலையீட்டுக்குப் பின்னராவது உட்கட்சி மோதல் ஓயுமா? என்பது அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications