7+1 க்கு அதிமுக ரெடி ! ரவுண்டா 10 பாஜக ப்ளான்! நின்று விளையாடும் பாமக!
2024 மக்களவைத் தேர்தல் தேதியைத் தலைமைத் தேர்தல் ஆணையம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
மொத்தம் 7 கட்டமாக மக்களவைத் தேர்தலை நடத்தவுள்ளது என்றும் முதல்கட்டம் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடக்கவுள்ளதாகவும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளதாகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் இன்று அறிவித்துள்ளார்.

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவடைந்துவிட்டது. அதே நேரம் அதிமுக அணியில் இன்னும் கூட்டணியே உறுதியாகவில்லை.
கடந்த தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியிலிருந்த புதிய தமிழகம் அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது. அதற்கு அடுத்ததாக தேமுதிகவும் தற்போது வரை அதிமுக அணியில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக முன்பே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.
ஆனால், அதே நேரம் அக்கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பும் உள்ளதாகச் சொல்லப்பட்டு வருகிறது. அப்படியான ஊகங்களை நம்ப வேண்டாம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே இன்று தேமுதிகவுக்கும் அதிமுகவுக்குமான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அதை அக்கட்சி சார்பில் யாரும் உறுதி செய்யவில்லை. இதற்கு முன்பாகவே 2 கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. ஆனாலும் அதற்குப் பின்னர் ஏதோ ஒரு தேக்க நிலை நீடிக்கிறது.

ஒருவேளை பாமக கூட்டணிக்கு வருவது உறுதியானது பிறகு தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தையை வைத்துக் கொள்ளலாம் என்று அதிமுக தரப்பு நினைக்கக் கூடும். அதற்காகக் காலதாமதமாகவே இதை எடுத்துக் கொள்ளலாம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் அதிமுகவை தன்பக்கம் அவர் கொண்டுவந்துவிட்டார் என்று நம்பிக் கொண்டிருந்த சமயத்தில், அதிலும் ஒரு குழப்பம் தொடங்கி உள்ளது.
தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னம் என்பதை அறிந்தே சின்னம் தொடர்பான புகாருக்கு விளக்கம் அளிக்கச் சொல்லி இருப்பதற்கு ஏதோ ஒரு அரசியல் விளையாட்டு உள்ளதாகவே அனுபவசாலிகள் சொல்கிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக சில மாதங்களாக இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று சொல்லி வந்த ஒபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையம் வரை சென்று சிவில் வழக்கைக் காரணம் காட்டி இரட்டை இலையை தங்கள் அணிக்கும் ஒதுக்க முறையிட்டு உள்ளது.
ஒரே சின்னத்தில் அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியும் பாஜக கூட்டணியில் ஒபிஎஸ் அணியும் போட்டியிட்டால் அதைவிட வேறு காமெடி இருக்க முடியாது. தேர்தல் ஆணையம் அதற்கு இடமளிக்காது. அப்படியான பட்சத்தில் சின்னம் ஏதேனும் முடக்கப்பட்டால், அது இன்னும் அதிமுக அணிக்குப் பின்னடைவாகப் போய்விடும்.
அப்படி என்றால் அதிமுக அணியைப் பல கட்சிகள் தலைமையாக ஏற்கமாட்டார்கள். இரட்டை இலை இல்லாத அதிமுகவுடன் நிற்பதைவிட பாஜக பக்கம் போய்விடலாம் என அக்கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒரு முடிவை எடுக்கலாம்.
இவை அனைத்தும் யூகங்கள்தான். எதுவும் உறுதியான தகவல் இல்லை. இரட்டை இலை சின்னம் தொடர்பாகச் சரியான முடிவு கிடைக்கும் வரை இந்த ஊகங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

அதிமுக அணியில் பாமகவை எப்படியான கொண்டு வர வேண்டும் என்று பல கட்ட முயற்சிகளைச் செய்து வருகிறார் எடப்பாடி. அவர் திமுகவுக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்றால், அதில் கட்டாயம் பாமக இருந்தே ஆகவேண்டும்.
தற்போது கிடைத்துள்ள தகவலின் படி பாமகவுக்கு 7+1 இடங்களை ஒதுக்க அதிமுக தரப்பு சம்மதம் தெரிவித்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இதைவிட அதிக இடங்களை பாமக கேட்பதாகச் சொல்கிறார்கள். அதாவது 10+1 என்பது அன்புமணியின் கனவாக உள்ளது என்கிறார்கள்.
அவரது தந்தை டாக்டர் ராமதாஸ் அதற்குக் கீழாகக் கிடைத்தால் கூட அதிமுக அணியை விரும்புகிறார் என்று பேச்சுகள் வருகின்றன. இப்போது கட்சியானது அன்புமணியின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது.
முன்பு எல்லாம் டாக்டர் ராமதாஸ், தனக்கு அடுத்தபடியாக உள்ள 2 ஆம் கட்ட தலைவர்களைக் கலந்தாலோசிப்பார். அன்புமணியோ ஒரு முடிவை நோக்கி மற்ற அனைவரையும் இழுக்கப் பார்க்கிறார் என்கிறார்கள்.
குறிப்பாகச் சொல்லப் போனால், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி.கே. மணியைக் கூட அவர் கலந்தாலோசிப்பதில்லையாம். அவரது பேச்சு கட்சிக்குள் எடுபடவே இல்லை என்றும் சொல்கிறார்கள்.
அன்பு மணி, பாஜகவுடன் கூட்டணி என்ற கனவில் இருக்கிறார் என்கிறார்கள். அப்படி அவர் பாஜக பக்கம் போனால் அந்த அணிக்குக் கூடுதல் பலம் கிடைக்கும். தஞ்சை மாவட்டம், ராமநாதபுரம் மாவட்டங்களில் எல்லாம் பாமகவுக்குச் செல்வாக்கு இல்லை. அந்த மாவட்டங்களில் அமமுக மற்றும் ஒபிஎஸ் அணி பலமாக உள்ளது.
அதிமுகவுக்கு வட தமிழ்நாட்டில் பெரிய செல்வாக்கு இல்லை. அதைப்போலவே ஒபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனுக்கும் இந்தப் பகுதிகளில் செல்வாக்கு இல்லை.
இதற்கு இணையாக ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி போன்ற பகுதிகள் மற்றும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், விருத்தாசலம், சிதம்பரம், கடலூர் எனப் பரவலாக பாமகவுக்கு இணையாக பலம் உள்ள தேமுதிக அதிமுக பக்கம் உள்ளது. அதைச் சரி கட்ட பாமகவின் பலம் பாஜகவுக்குக் கிடைக்கும்.
அப்படி பாஜக பக்கம் பாமக வரவில்லை என்றால், அப்படியே அந்தப் பலம் பாமகவுக்குப் போகும். வட தமிழ்நாட்டில் அதிமுக சார்பாகப் போட்டியிடப் பெரிய அளவில் வேட்பாளர்கள் இல்லை. அந்த இடத்தை பாமகவை வைத்து ஈடு கட்ட எடப்பாடி கணக்குப் போடுகிறார்.
இன்னொரு பக்கம் அண்ணாமலை கணக்குப் போடுகிறார். வரும் 19 ஆம் தேதி மோடி சேலம் வர உள்ளார். அந்தக் கூட்டத்தில் அன்புமணியை ஒரே மேடையில் பிரதமர் மோடியுடன் அமர வைக்க வேண்டும் என்பதற்காக அண்ணாமலை பல கட்ட முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறார்.
சரத்குமாரைக் கட்சியைக் கலைக்கவைத்து பாஜகவில் இணைய வைத்ததால், அண்ணாமலையின் செல்வாக்கு மோடியிடம் கூடி உள்ளது. இதையும் சாதித்துவிட்டால் அண்ணாமலையை அசைக்க முடியாத அளவுக்கு அவர் கட்சிக்குள் பலம் பெற்று விடுவார்.
ஆகவே, அதற்காக பாஜக கூட்டணியில் அன்புமணிக்கு அமைச்சர் பதவி தரும் அளவுக்கு நம்பிக்கை அளிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள். ஒருவேளை வெற்றி பெறாமல் போனால் கூட, கூட்டணிக் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் தருவதாக வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன என்கிறார்கள்.
ஆக, பாமக இந்த ஆஃபர்களை மிகக் கவனமாக ஆலோசித்து வருகிறது. பதறும் காரியம் சிதறும் என்பார்கள். இந்த முறை அப்படிச் சிதறிவிடக் கூடாது. ஏனெனில் இது ஒரு பொன்னான வாய்ப்பு. ஆகவே நின்று விளையாடுகிறது பாமக.












Click it and Unblock the Notifications