அண்ணாமலை பாதயாத்திரை.. அதிமுக பங்கேற்பு.. ராமேஸ்வரம் போகும் ஆர்.பி உதயகுமார்.. அப்போ எடப்பாடி?
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை தொடக்கவிழாவில் பங்கேற்க அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவுமான ஆர்.பி. உதயகுமார் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்று முதல் பாதயாத்திரை தொடங்குகிறார். ஆறுமாதம் பாதயாத்திரை பயணம் செல்கிறார். பல ஊர்களில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பாதயாத்திரை பயணத்தின் தொடக்கவிழா ராமேஸ்வரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று அண்ணாமலையின் நடைபயணத்தைத் தொடங்கி வைத்துப் பேசுகிறார்

இந்த தொடக்கவிழாவில் பங்கேற்க வருமாறு கூட்டணி கட்சித்தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார் அண்ணாமலை. பாஜக கூட்டணியில் உள்ள பெரிய கட்சியான அதிமுகவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அதிமுக பங்கேற்குமா என்ற புறக்கணிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அண்ணாமலை அதிமுகவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். இதன் உச்சக்கட்டமாக சில மாதங்களுக்கு முன்பு, அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஊழல் முதல்வர் என்று அண்ணாமலை தெரிவித்தார். அதிமுக மாஜி அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். கூட்டணியில் இருந்து கொண்டே இவ்வாறு பேசியது அதிமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அண்ணாமலையின் இந்த கருத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தை பதிவு செய்தார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில், அண்ணாமலையின் கருத்துக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதிமுகவினர் வலியுறுத்தினர். அதை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத அண்ணாமலை, தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கூறினார். ஜெயலலிதா பற்றி பேசிய பேச்சுக்கு மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்கவில்லை.

அதிமுக பாஜக கூட்டணி பற்றியும் அண்ணாமலை கூறிய கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தியது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை மிரட்டல் விடுத்தார். அதற்கு எடப்பாடி பழனிச்சாமியோ, லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி தொடர்பாக டெல்லி மேலிடம் தான் முடிவு செய்யும். அண்ணாமலையிடம் கூட்டணி தொடர்பாக பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார்.
இந்த சூழ்நிலையில்தான் இன்று முதல் ராமேஸ்வரத்தில் இருந்து தமிழகம் முழுவதும் நடைபயணம் தொடங்குகிறார் அண்ணாமலை. இந்த பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாலை 4 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இந்த நடைபயணம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதியை சுற்றி சுமார் 6 மாத காலம் வரை வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இந்த நடைபயண தொடக்கவிழாவில் பங்கேற்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி அழைப்பு விடுத்தார் அண்ணாமலை. முறைப்படி கட்சி அலுவலகத்தில் கடிதமும் கொடுத்தார். ஆனால் அண்ணாமலை நேரடியாக சந்தித்து அழைப்பு வழங்கவில்லை. இந்த விழாவில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பாரா? புறக்கணிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

அண்ணாமலை தொடங்கும் நடைபயணத்தில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்க மாட்டார் என்று அதிமுக முன்னணி தலைவர்கள் தெரிவித்தனர். அப்படி சொன்னது போலவே எடப்பாடி பழனிச்சாமி ராமேஸ்வரம் செல்லவில்லை. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க அண்ணாமலை நடைபயண தொடக்கவிழாவை பாமக தலைவர் அன்புமணியும் புறக்கணித்துள்ளார். அவர், இன்று நெய்வேலியில் என்எல்சி முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்கிறார். மேலும் பாமக சார்பிலும் நடை பயண துவக்க விழாவில் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications