சசிகலா வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக மனு...கோர்ட்டில் அவகாசம் கேட்ட சசிகலா
அதிமுக நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுவிற்குப் பதிலளிக்க சசிகலாவுக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக நிர்வாகிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுவிற்குப் பதிலளிக்க சசிகலாவுக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக 2016ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி மரணம் அடைந்தார். அதன் பின்னர் பொதுச் செயலாளராக சசிகலாவையும், துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனையும் அதிமுகவினர் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.

இதன் பின்னர் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா நான்கு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
சசிகலா பெங்களூரு சிறையில் இருந்தபோது, 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், அதிமுக நிர்வாகிகளாக சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும், குறிப்பாக தங்களைக் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தனர். பின்னர் இந்த வழக்குகள் சென்னை நகர சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
கடந்த முறை இந்த வழக்குகள் விசாரனைக்கு வந்தபோது, டி.டி.வி.தினகரன் அமமுக என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வருவதால், இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக டி.டி.வி.தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு வெள்ளிக்கிழமையன்று மீண்டும் நீதிபதி ரவி முன்பு விசாரணைக்கு வந்தபோது, சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக நிர்வாகிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சசிகலா தரப்பில் பதில் அளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து இந்த மனுவிற்கு சசிகலா பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 23ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications