மோடியின் லாக்டவுன் யுத்திகளுக்கு தமிழகத்தை ஆளும் அதிமுக முழு ஆதரவு
சென்னை: கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான பிரதமர் மோடியின் லாக்டவுன் யுத்திக்கு முழு ஆதரவளிப்பதாக அதிமுக தெரிவித்தள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகளை முழுமையாக ஆதரிக்கிறோம் என்றும் கூறியுள்ளது.
Recommended Video
தமிழக சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், அத்தியாவசிய உபகரணங்கள் மற்றும் மருந்துகளை வாங்கவும் 3,000 கோடி ரூபாய் அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிமுக மீண்டும் வலியுறுத்தியது.
பிரதமர் மோடி நேற்று காலை நாடாளுமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டினார். வீடியோ கான்பிரன்ஸ் முறையில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் பிரச்சனை தொடர்பாக விவாதித்தார்.
9000 கோடி தேவை
இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் நவநீதி கிருஷ்ணன் எம்பி (ராஜ்யசபா) கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் 8 நிமிடம் பேசிய அவர் சில முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்தார். இதன்படி தமிழக சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், அத்தியாவசிய உபகரணங்கள் மற்றும் மருந்துகளை வாங்கவும் 3,000 கோடி ரூபாய் அனுமதி வழங்க வேண்டும். தமிழகத்தின் பல்வேறு துறைகளுக்கு குறிப்பிட்ட நிவாரண நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை புதுப்பிக்க 9,000 கோடி சிறப்பு மானியத்தை அளிக்க வேண்டும் என்றார்.
அத்தியாவசிய பொருட்கள்
மேலும் மோடி அரசின் லாக்டவுன் நடவடிக்கைகளை பாராட்டிய அவர் , இதன் காரணமாக இந்தியா பாதுகாப்பாக உள்ளது என்றார். பிரதமர். மோடிக்கு முதலமைச்சர் எழுதிய இரண்டு கடிதங்களையும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் கோரிக்கைகள் மற்றும் முயற்சிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஒன்பது பக்க கடிதத்தையும் சுட்டிக்காட்டிய நவநீதிகிருஷ்ணன் , நாட்டில் அதிக கொரோனா நோயாளிகள் உள்ள 2வது மாநிலமாக உள்ள தமிழகத்திற்கு கொரோனா வைரஸ் தொற்றை திறம்பட எதிர்த்துப் போராட கூடுதல் நிதி தேவை என்று கூறினார். வட மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும் அத்தியாவசிய பொருட்கள் எந்தவித இடையூறும் இன்றி தமிழகத்தை அடைய வேண்டும் என்று அவர் முதல்வர் சார்பில் சிறப்பு கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக நவநீதிகிருஷ்ணன் எம்பி கூறுகையில், "மத்திய அரசு எடுக்கும் எந்த முடிவையும் நாங்கள் ஆதரிக்கிறோம். மோடி அரசாங்கத்துடன் இணந்து செயல்படுவதில் மகிழ்ச்சியடைகிறோம். மத்திய அரசின் நடவடிக்கைகளை முழுமையாக ஆதரிக்கிறோம்" என்றார்.
மத்திய அரசு முடிவு
வரும் ஏப்ரல் 14ம் தேதியுடன் லாக்வுன் நிறைவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் லாக்டவுனை நீடிக்கப்படும் என்ற கேள்விக்கு அண்மையில் பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,. ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடையும் 21 நாள் லாக்டவுனை நீட்டிப்பது குறித்து மத்திய அரசின் முடிவெடுக்கும் என்று கூறியிருந்தார். இந்நிலையிலை லாக்டவுன் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழக அரசு (அதிமுகஅரசு ) முழு ஆதரவு அளித்துள்ளது.
எதிர்பார்க்கிறது தமிழகம்
தமிழக அரசு முழுமையான லாக்டவுன் இல்லை என்றால் லாக்டவுனில் அர்த்தம் இல்லை என்று நம்புவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழகத்தின் மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகைகயில் "ரயில்களும் விமானங்களும் மீண்டும் இயங்க தொடங்கினால், லாக்டவுன் இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. எனவே, மத்திய அரசு என்ன செய்கிறது என்பதை நாங்கள் காத்திருந்து பார்க்கிறோம். இது மொத்தமாக லாக்டவுனாக இருக்க வேண்டும்" என்றார்.