மவுனம் கலைத்து சசிகலா வைத்த கோரிக்கை.. "ம்ஹூம்.." அதிமுக திட்டவட்டம்.. பரபரக்கும் தேர்தல் களம்
சென்னை: சசிகலா மவுனம் கலைத்து அழைப்பு விடுத்தும் அதிமுக தரப்பில், அதை ஏற்கவில்லை. எனவே தமிழக தேர்தல் களம் பல முனை போட்டியை பார்க்க உள்ளது உறுதியாகியுள்ளது.
பெங்களூரிலிருந்து சென்னை திரும்பிய சசிகலா தொடர்ந்து பல நாட்களாக மவுனம் காத்து வந்தார். அவர் வீட்டுக்குள்தான் இருக்கிறாரா என்ற சந்தேகம் உளவுத்துறையினருக்கே வந்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில்தான், ஜெ. பிறந்தநாளான 24ம் தேதி தனது இல்லத்தில் நடந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மவுனம் கலைத்தார் சசிகலா.
பாஜக ரூட் ரொம்ப க்ளியர்.. கோவையில் மோடி பேச்சை கவனித்தீர்களா.. முதல் பிரச்சாரத்திலே 'டாப் கியர்'
மறைமுக மெசேஜ்
நாம் எல்லோரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்து பொதுஎதிரி திமுகவை வீழ்த்த வேண்டும் என்றார் அவர். இவ்வாறு சசிகலா கூறியதை அதிமுக ஏற்றால் அமமுக கட்சி தேர்தலில் களமிறங்காது என்பது இதன் மறைமுக மெசேஜ். இதை எப்படியும் அதிமுக தலைமை ஏற்காது என்றுதான் பல அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.
சசிகலா வியூகம்
அதேநேரம், சசிகலா இவ்வாறு கூறுவதன் மூலம், நான் அழைத்தேன், அவர்கள்தான் வரவில்லை.. எனவே அமமுக போட்டியிடுவதை தடுக்க முடியாது என கூறிவிட முடியும். இதற்காகத்தான் சசிகலா இப்படி பேசினார் என்று சில அரசியல் பார்வையாளர்கள் கூறினர்.
அதிமுகவினருக்கு பொருந்தாது
அதே மாதிரிதான் நடந்துள்ளது. சசிகலா அழைப்பு குறித்து, அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதிலளிக்கையில்,
"சசிகலா அழைப்பு அதிமுகவினருக்கு பொருந்தாது. அவர் அமமுகவினரைத்தான் அழைத்துள்ளார்." என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதாவது அமமுகவினர்தான் ஒன்றிணைய வேண்டும் என்கிறார் ஜெயக்குமார்.
சரத்குமார், ராதிகா சந்திப்பு
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சசிகலாவை சந்தித்தார். இதுகுறித்து ஜெயக்குமாரிடம் கேட்டபோது, சரத்குமார், ராதிகா அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.
பல முனை தேர்தல்
ஜெயக்குமார் பேட்டியை வைத்து பார்த்தால், அமமுக தேர்தலில் களமிறங்கப்போவது உறுதி எனத் தெரிகிறது. எனவே, திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுக கூட்டணி, நாம் தமிழர், ம.நீ.ம என பல முனை போட்டியை தமிழக தேர்தல் களம் சந்திக்க உள்ளது உறுதியாகியுள்ளது. இதில், ம.நீ.ம ஏதாவது ஒரு கூட்டணியில் இணையக்கூடும் என்று கூறப்படுகிறது.