நாளை வாக்கு எண்ணிக்கை.. 17-சி படிவம் அரசியல் கட்சியினருக்கு மிக முக்கியமானது.. ஏன் தெரியுமா?
சென்னை: வாக்கு எண்ணிக்கையின்போது வாக்குப்பதிவை சரிபார்க்கும் 17 சி படிவம் கொண்டுவர அனுமதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் அதிமுக முக்கிய கோரிக்கை வைத்துள்ளது. அந்த படிவத்தின் முக்கியத்துவம் என்ன என்பதை இப்போது பார்ப்போம்
வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளையும் மின்னணு இயந்திரத்தில் காட்டும் எண்ணிக்கையையும் சரிபார்க்க 17-சி படிவத்தை வேட்பாளர்களின் ஏஜென்ட்கள் வாக்கு பதிவு மையங்களுக்கு கொண்டு வருவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அதிமுக சார்பில் அதன் வழக்கறிஞர் பிரிவு மாநில இணைச்செயலாளர் சி.திருமாறன் நேற்று மனு அளித்தார்.
முன்னதாக வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை விவரங்கள் அடங்கிய 17-சி படிவம் மற்றும் எழுதும் தாள்கள் கொண்டுவர அனுமதி இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படிவம் கண்டிப்பாக வாக்கு எண்ணிக்கைக்கு தேவை என்று அதிமுக எண்ணுகிறது.

வாக்கு பதிவு இயந்திரம்
ஏனெனில் அப்போதுதான் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையையும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் காட்டும் எண்ணிக்கையையும் ஒப்பிட முடியும். எனவே, 17-சி படிவம் அனுமதிக்கப்படவில்லை என்றால் வாக்கு இயந்திரத்தை திறக்கும்போது 17-சி படிவத்தை தேர்தல் அதிகாரி வேட்பாளர்களின் ஏஜென்ட்களுக்கு காட்டுமாறு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தி உள்ளது.

ஏன் முக்கியமானது
அதிமுக 17-சி படிவம் கேட்க காரணமும் இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வேட்பாளர்களின் முகவர்கள் செல்லும் போது, தேர்தல் நாளன்று வாக்குசாவடியில் கட்சி முகவர்களாக பணியாற்றுபவர்களிடத்தில் கொடுக்கப்பட்ட 17C படிவத்தை தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கட்சிகள் வலியுறுத்துகின்றன.

வாக்கு விவரங்கள்
ஏனெனில் அந்த 17C படிவத்தில் தான் ஒவ்வொரு பூத்தில் பதிவான மொத்த வாக்குகள் விபரம், வாக்கு இயந்திரத்தின் வரிசை எண்கள், (control unit, Ballot unit and VVPAT), கட்சி முகவர்கள் கையெழுத்து என அத்தனை விபரங்கள் இருக்கும்.

வாக்கு எண்ணிக்கையை நிறுத்தலாம்
வாக்கு எண்ணும் அன்று பூத் வாரியாக வாக்கு பதிவு இயந்திரத்தை திறக்கும் போது இந்த 17 C படிவத்தில் குறிப்பிடப்பட்ட விபரங்களை வேட்பாளர்களின் முகவர்கள் சரிபார்க்க வேண்டும். குறிப்பாக பூத் எண், மொத்த வாக்குகள் எண்ணிக்கை, வாக்கு பதிவு இயந்திரத்தின் வரிசை எண்ணை சரிபார்க்க வேண்டும். அதில் ஏதும் வித்தியாசம் இருந்தால், குறிப்பாக பதிவான மொத்த வாக்குகள் எண்ணிக்கையில் வித்தியாசம் தெரிந்தால் நிச்சயம் அந்த பூத்தின் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தலாம். சந்தேகங்களை நிவர்த்தி செய்த பிறகே வாக்கு எண்ண அனுமதிப்பார்கள். எனவே தான் 17 சி படிவத்தை அதிமுக விரும்புகிறது.

அடிப்படை வசதிகள்
இதனிடையே வேட்பாளர்கள், ஏஜென்ட்கள் ஆகியோர் சுமார் 12 மணி நேரம் வாக்கு எண்ணும் மையங்களில் இருக்க வேண்டியிருப்பதால் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் அதிமுக கோரிக்கை வைத்துள்ளது. தண்ணீர், கழிவறை வசதிகளை கூடுதலாக செய்து தரவேண்டும். கண்டிப்பாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு ஆம்புலன்ஸை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications