"விஜய் முட்டி மோதி நம்மிடம் வருவார்.. பொறுங்க.. அதிமுக ஆட்சிதான்”.. ரிசார்ட்டில் எடப்பாடி நம்பிக்கை!
சென்னை: தமிழக அரசியல் அதிமுகவை நோக்கி நகரும், பொறுத்திருங்கள் நல்லதே நடக்கும்; அதிமுக ஆட்சி அமையும் என புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் மத்தியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாக தகவல்கள் பரபரக்கின்றன.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தவெக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இடங்களை பெற்றிராத நிலையில், அக்கட்சிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. இதன் மூலம் தவெக ஆதரவு எம்.எல்.ஏக்களின் பலம் 112 ஆக அதிகரித்துள்ளது. தவெக ஆட்சி அமைக்கத் தேவையான மெஜாரிட்டி பெற இன்னும் 6 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை.

இந்தச் சூழலில், தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தவெக, ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆனால், ஆளுநர், விஜய்யை ஆட்சி அமைக்க இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறதா எனக் கேட்டுள்ளார். இதனால், திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற மற்ற கட்சிகளின் ஆதரவைக் கோரி வருகிறது தவெக.
அதிமுக கூட்டணி 53 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக தனியாக 47 இடங்களில் வென்றது. அவர்களில் சுமார் 30 எம்எல்ஏக்கள், புதுச்சேரி பூரணாங்குபத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தவெக ஆட்சி அமைக்க இன்னும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவைத் தேடி வரும் சூழலில் அதிமுக எம்.எல்.ஏக்களை தக்கவைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? அல்லது வேறு ஏதேனும் திட்டமா என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.
முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன், தளவாய் சுந்தரம், சேவூர் ராமச்சந்திரன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மேட்டூர் எம்.எல்.ஏ வெங்கடாசலம் பண்ருட்டி எம்.எல்.ஏ மோகன், நெய்வேலி எம்.எல்.ஏ சொரத்தூர் ராஜேந்திரன், புவனகிரி எம்.எல்.ஏ அருண்மொழி தேவன் உள்பட 30 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று இரவு புதுச்சேரியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட்டுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் சென்றனர். எடப்பாடி பழனிசாமி, தமிழக அதிமுக எம்எல்ஏக்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ரிசார்ட்டில் தங்கியுள்ள அதிமுக எம்.எல்.ஏக்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அவர்களிடம் நல்லதே நடக்கும் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், திமுகவுடன் கண்டிப்பாக கூட்டணி கிடையாது எனவும், அனைவரும் பொறுமை காக்கவும், எம்.எல்.ஏக்கள் யாரும் புதுச்சேரியில் இருந்து புறப்பட வேண்டாம் என்றும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும்பான்மை பலம் இல்லாத விஜய் முட்டி மோதி இங்கே வருவார். நம் தலைமையில் ஆட்சி அமையும், பொறுத்திருங்கள் எனவும் எடப்பாடி பழனிசாமி பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தவெக தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.













Click it and Unblock the Notifications