திரும்ப திரும்ப கேட்காதீங்க.. பாஜகவுடன் கூட்டணி இல்லை.. மற்ற கட்சிகளுக்குத்தான் அழைப்பு: எடப்பாடி
சென்னை: நான் கூட்டணிக்கு வருமாறு வேண்டுகோள் விடுப்பது மற்ற கட்சிகளுக்கு தான். பாஜகவுக்கு அல்ல, லோக்சபா தேர்தலின்போதே பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என தெளிவுபடுத்தி விட்டோம். திரும்பத் திரும்ப கேட்க வேண்டாம் என என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே இன்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஈபிஎஸ் பேசுகையில், "எங்களைப் பொறுத்தவரை மக்கள் விரோத திமுக அரசு அகற்றப்பட வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜவுடன் கூட்டணி இல்லை என்று ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம்.

மீண்டும் மீண்டும் இந்த கேள்வியை கேட்க வேண்டாம். கூட்டணிக்கு வருமாறு கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது எல்லாம் மற்ற கட்சிகளுக்குத்தான் அது பாஜகவுக்குப் பொருந்தாது. ஏற்கனவே லோக்சபா தேர்தலில் தெளிவுபடுத்தி விட்டோம். வரும் சட்டசபை தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டோம். இதனை தவிர்த்து தான் பேசி கொண்டு இருக்கிறோம்." எனத் தெரிவித்தார்.
தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இதனால் இந்தியாவிலேயே தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது.ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒன்றிணைத்து 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு அதிமுக மெகா கூட்டணி அமைக்கும். அதிமுகவின் மெகா கூட்டணியில் பாஜக இருக்காது. மக்களை குழப்பி ஆதாயம் தேட முதல்வர் ஸ்டாலின் முயற்சி செய்கிறார்." என்றார்.
நடிகர் விஜய்யின் கட்சி பற்றி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "அதிமுக பலமான தொண்டர்களைக் கொண்ட கட்சி. அது எப்போதும் நெருக்கடியை சந்திக்காது. அதிமுக ஆட்சியிலிருந்தாலும் இல்லை என்றாலும் மக்களுக்காக பணியாற்றும் கட்சி என்பதால் அதிமுக என்றும் செல்வாக்கு உள்ள கட்சி. கடந்த 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலை விட தற்போது லோக்சபா தேர்தலில் அதிக ஓட்டுக்களை அதிமுக பெற்றுள்ளது. விஜய் கட்சி துவங்கி உள்ளதால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதேபோல திமுக அதன் ஓட்டு சதவீதத்தை இழந்துள்ளது. இதுதான் உண்மை." எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "கடந்த அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவக்கல்லூரிகள் கொண்டுவரப் பட்டது. திமுக அரசு, உரிய மருத்துவர்களை நியமிக்காமல் குறைந்தளவு சிகிச்சைகள் மட்டுமே வழங்கி வருகிறது. மக்களுக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவரிடம் தான் செல்ல வேண்டும். மருத்துவர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மருத்துவர்களை தாக்குவது ஏற்புடையதல்ல." எனத் தெரிவித்துள்ளார்.
2026 சட்டசபை தேர்தல் களம் இப்போதே பரபரக்கத் தொடங்கிவிட்டது. அதிமுக கூட்டணியில் எந்தெந்தக் கட்சிகள் இடம்பெறும் என்பது பெரும் கேள்வியாக இருந்து வருகிறது. இந்நிலையில், பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி மறுக்காமல் மழுப்பலாக பதில் அளித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில், பாஜகவுடன் கூட்டணி இல்லை, கூட்டணிக்கான அழைப்பு எல்லாம் மற்ற கட்சிகளுக்குத்தான் என தெளிவுபடுத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications