அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஏப்ரல் 20-ல் நடைபெறும்: எடப்பாடி பழனிசாமி
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் ஏப்ரல் 20-ந் தேதி நடைபெறும் என்று அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுகவின் 2022 ஜூலை 11 பொதுக்குழு தீர்மான வழக்குகளில் தற்போதைய நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான நிலை உள்ளது. ஆகையால் அதிமுகவின் பொதுச்செயலாலராகப் பொறுப்பேற்று அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தைக் கூட்டினார்.

சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் ஆகஸ்ட் 20-ந் தேதி மதுரையில் அதிமுக மாநாடு நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் லோக்சபா தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மொத்தம் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 20-ந் தேதி (நாளை மறுநாள்), அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார் அக்கட்சி பொதுச்செயலாலர் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகிவிட்டாலும் சென்னை உயர்நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் உள்ள வழக்குகள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டதை எதிர்க்கும் ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை ஏப்ரல் 20-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக தம்மை அங்கீகரிக்க கோரி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரும் எடப்பாடி பழனிசாமி மனு மீது 10 நாட்களில் முடிவை அறிவிக்க இருக்கிறது தேர்தல் ஆணையம். இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் ஏப்ரல் 20-ந் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications