விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா
சென்னை: பதவியேற்ற உடனே ராஜினாமா செய்த அதிமுகவின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பின்னணியை ஆராய வேண்டும். மிகப்பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக தகவல். இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு அதிமுக ராஜ்யசபா எம்பி தனபால் கோரியுள்ளார்.

சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது. அதன்பிறகு கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டது. ஜெயித்த 47 எம்எல்ஏக்கள் இருஅணியாக பிரிந்தனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியில் 22 எம்எல்ஏக்களும், சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி தலைமையிலான அணியில் 25 எம்எல்ஏக்களும் இருந்தனர்.
அதன்பிறகு சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி அணியின் எம்எல்ஏக்கள், எடப்பாடி பழனிச்சாமி பக்கம் வந்தனர். அதுமட்டுமின்றி மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமாரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமர், தாராபுரம் எம்எல் சத்யபாமா, அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களின் பதவியை ராஜினாமா செய்து முதல்வர் விஜய்யின் தவெகவில் இணைந்தனர்.
இந்த எம்எல்ஏக்களின் ராஜினாமாவின் பின்னணியில் குதிரை பேரம் உள்ளதாகவும், ஆசை வார்த்தைகள் காட்டி அவர்களை விஜய் ராஜினாமா செய்ய வைத்து கட்சியில் இணைத்து கொண்டதாக எடப்பாடி பழனிச்சாமி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் அதனை தவெக தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்நிலையில் தான் எம்எல்ஏக்கள் ராஜினாமா தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை கோரி உள்ளது அதிமுக. இதுதொடர்பாக அதிமுக ராஜ்யசபா எம்பி தனபால் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''தவெக விற்கு தனி மெஜாரிட்டி இல்லாத சூழலில், அண்ணா திமுக வை உடைக்க நினைத்தும் முடியாத நிலையில், பதவியேற்ற உடனே ராஜினாமா செய்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பின்னணியை ஆராய வேண்டும். மிகப்பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக தகவல். ஜனநாயகத்தை காக்க மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அமலாக்கத் துறையும் இதில் கவனம் செலுத்த வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
இருப்பினும் தற்போது வரை சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக அதிமுக சார்பில் நீதிமன்றத்தை யாரும் நாடவில்லை. மத்திய அமைச்சர்களையும் சந்தித்து கோரிக்கை வைக்கவில்லை. ஆனாலும் இந்த டிமாண்ட்டை முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, முதல்வர் விஜய் இன்னும் சந்தித்து பேசவில்லை.
அதேவேளையில் அதிமுகவில் சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி தனி அணியாக செயல்பட்டபோது அவர்களை நேரில் சந்தித்து பேசினார். நம்பிக்கை கோரிய வாக்கெடுப்பில் தனக்கு ஆதரவளிக்கும்படி அவர் கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தான் அதிமுகவின் 25 எம்எல்ஏக்கள் தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய்யின் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். மேலும் தங்களை அமைச்சரவையில் விஜய் சேர்த்து கொள்வார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் விஜய் சேர்க்கவில்லை.
இதனால் 25 எம்எல்ஏக்களும் தகுதி நீக்க நடவடிக்கைக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து சிவி சண்முகம் அணியை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விஜய்யின் தவெகவில் இணைந்தனர். இதனால் அவரது அணி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 21 ஆக சரிந்தது. அதன்பிறகு அடுத்தடுத்து சிவி சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அவருடன் கைகோர்த்தனர்.
தற்போது சிவி சண்முகம் மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டசபை தொகுதி எம்எல்ஏ விஜயபாஸ்கரும் மட்டுமே அங்கு உள்ளனர். மற்றவர்கள் எடப்பாடி பழனிச்சாமியுடன் சேர்ந்துவிட்டனர். இவர்கள் 2 பேருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்பட விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. விரைவில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணையலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணையை கோரி உள்ளார் அதிமுக ராஜ்யசபா எம்பி தனபால் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications