அதிமுகவில் கலகம்- எடப்பாடி பழனிசாமி பாராட்டு விழா புறக்கணிப்பு ஏன்?- செங்கோட்டையன் பரபர விளக்கம்!
சென்னை: அதிமுகவில் ஓய்ந்திருந்த கலகக் குரல் மீண்டும் வெடித்துள்ளது. கோவையில் அத்திக் கடவு- அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவை அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் புறக்கணித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறாததால் தாம் அந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்ததாகவும் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
அண்ணா திமுக ஏற்கனவே பல்வேறு அணிகளாக பிரிந்துள்ளன. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் அதிமுகவின் அணிகள் ஒருங்கிணையுமா? என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதிமுக தொடர்பான வழக்குகளிலும் விரைவில் நீதிமன்ற தீர்ப்பு வர இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா
இந்த நிலையில் அதிமுக தமது வாக்கு வங்கியான மேற்கு மாவட்டத்தை தக்க வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு முதல்வராக இருந்த போது அடிக்கல் நாட்டியதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று கோவை அன்னூர் பகுதியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் எஸ்பி வேலுமணி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன்
அதேநேரத்தில் மேற்கு மாவட்ட அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்தது சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம்
செங்கோட்டையன் கூறியதாவது: அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்காக எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்திய ஏற்பாட்டுக் குழுவினர் சில நாட்களுக்கு முன்னர் என்னை சந்தித்தனர். அந்த சந்திப்பின் போது ஒரு வேண்டுகோள் வைத்தேன். எங்களை உருவாக்கிய எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் அந்த விழாவில் இடம் பெறவில்லை. என்னிடம் கலந்து பேசி இருந்திருந்தால் அதை ஏற்பாட்டுக் குழுவின் கவனத்துக்கு கொண்டு வந்திருப்பேன்.
ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்கள் ஏன் இல்லை?
இந்த விழா தொடர்பாக டிஜிட்டல் போர்டுகள், தட்டிகள் வைத்த போதுதான் என் கவனத்துக்கும் வந்தது. ஆகவே, என்னை வளர்த்து ஆளாக்கிய தலைவர்களின் திருவுருவப் படங்கள் இல்லை. இத்திட்டத்தைக் கொண்டு வருவதற்காக 2011-ல் ஜெயலலிதா ரூ.3.75 லட்சம் வழங்கினார். இன்றைய அத்திக்கடவு- அவினாசி திட்டம் தொடங்குவதற்கு ஜெயலலிதா அடித்தளமாக இருந்தார். அவரது படம் இந்த நிகழ்ச்சியில் இல்லை. இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.
செங்கோட்டையனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் அதிமுக சீனியர்கள் சிலரும் தங்களது கலகக் குரலை வெளிப்படுத்தக் கூடும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications