பாஜக பகை முடிப்போம்- சமரசம் இல்லை- பதிலடி தொடரும்- தடை எதுவும் இல்லை- அதிமுக ராஜ்சத்யன் எச்சரிக்கை!
சென்னை: பாஜகவை விமர்சிப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் தடை எதுவும் விதிக்கவில்லை. பாஜகவுக்கான பதிலடி தொடரும் என அதிமுகவின் ஐடி விங் நிர்வாகி ராஜ் சத்யன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்தார். இதனால் அண்ணாமலைக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே கண்டன தீர்மானம் நிறைவேற்றினார். பின்னர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணா குறித்து இழிவாக பேசினார் அண்ணாமலை. இது அண்ணா திமுகவினரை மீண்டும் கொந்தளிக்க வைத்தது. அதிமுகவின் மூத்த தலைவர்களான ஜெயக்குமார், சிவி சண்முகம், செல்லூர் ராஜூ முதலில் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனாலும் அண்ணாமலை அதிமுக தலைவர்களையும் விளாசியிருந்தார்.
அதிமுக- பாஜக கூட்டணி முறிவு: இதனால் கடும் கோபம் அடைந்த அதிமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என பகிரங்கமாக அறிவித்தது. பாஜகவுடனான கூட்டணி முறிந்துவிட்டதாக அதிமுக அறிவித்த போதும் பாஜகவினர் அதை ஏற்கவில்லை. நாங்கள் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என கூறி வந்தனர். அதேநேரத்தில் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர், பாஜகவே வேண்டாம் என உரத்து குரல் கொடுத்து வருகின்றனர்.
சமாதான பேச்சா? : இந்நிலையில் அதிமுக- பாஜக மேலிடங்கள், இருதரப்பையும் சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறது; இருதரப்பும் யாரும் யாரையும் விமர்சிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.
கொஞ்சி கூட்டணியா பேச முடியும்?: ஆனால் அதிமுகவின் ஐடி விங் நிர்வாகி ராஜ் சத்யன் இதனை நிராகரித்துள்ளார். இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் ராஜ் சத்யன் பதிவிட்டுள்ளதாவது: கண்டிப்பாக திட்டுவோம். நாங்கள் தெய்வம் என நினைக்கும் எங்கள் தலைவர்களை அவர்கள் சிறுமைப்படுத்த சிறுபிள்ளைத்தனமாக பேசும்போது, இவர்களோடு கொஞ்சி கூட்டணியா பேச முடியும்.

பகை முடிப்போம்: "அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை" எங்கள் தலைமை எந்த தடையும் எங்களுக்கு விதிக்கவில்லை... எங்கள் தலைவர்களை, எங்கள் அடையாளத்தை , எங்கள் கொள்கைகளை
யார் அவமதித்தாலும் , அவர்களுக்கு தக்க பதிலடி தருவதையே எங்கள் தலைமை விரும்பும் ,அதுவே கழக பொதுச்செயலாளரின் ஆணை எனக்கொண்டு எவர்வரினும் பகைமுடிப்போம். இவ்வாறு ராஜ்சத்யன் ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications