6 மாதத்தில் தமிழக கோரிக்கைகளை மோடி நிறைவேற்றிவிட்டாரா? Goback Modi என்னாச்சு? அதிமுக சரமாரி கேள்வி
சென்னை: திமுக ஆட்சியில் 6 மாத காலத்தில் தமிழகம் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் பிரதமர் மோடி நிறைவேற்றிவிட்டாரா? திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்டிவிட்டு இன்று வெள்ளைக்கொடி பறக்க விடுவது ஏன்? என்று அதிமுக மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் வி.பி.பி.பரமசிவம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் வி.பி.பி.பரமசிவம் இன்று வெளியிட்ட வீடியோவில் கூறி இருப்பதாவது: பிரதமர் மோடியின் தமிழகம் வருகையை முன்வைத்து ஆட்சியில் ஒன்று, ஆட்சியில் இல்லாத போது ஒன்று என திமுகவின் 2 முகங்கள் வெளிப்பட்டுள்ளன.
துருக்கி நாட்டுக்குப் பறந்த திமுக எம்.எல்.ஏ.! யாரை சந்திக்க இந்தப் பயணம்? பின்னணி இது தான்!
2018-ல் அதிமுக ஆட்சிக் காலத்தில் பிரதமர் மோடி ராணுவ தளவாட கண்காட்சிக்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வைரவிழா நிகழ்ச்சியில் பங்கேற்கவும் தமிழகம் வருகை தந்தார். அப்போது Goback Modi என ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து தமிழகம் முழுவதும் திமுகவினர் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
அன்று கறுப்பு கொடி ஏன்?
தமிழர் நலனுக்காக பிரதமர் மோடி எதுவும் செய்யவில்லை; தமிழர் நலனை கறுப்புக் கொடி போராட்டத்தின் மூலம் மீட்டுக் கொடுக்கப் போவதாக பொய்ப் பிரசாரம் செய்து மோடிக்கு எதிரான அரசியலை முன்னெடுப்பதாக பொதுமக்களை, சிறுபான்மை மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி இன்றைக்கு ஆட்சியில் அமர்ந்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதே பிரதமர் மோடி தமிழகம் வருகை தருகிறார். இப்போது திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, பிரதமர் மோடி எங்களுக்கு எதிரி அல்ல. நண்பர்தான். ஆகவே, கறுப்பு கொடி காட்டத் தேவை இல்லை என சொல்லி இருக்கிறார்.
தந்துவிட்டதா மத்திய அரசு?
அப்படியானால் 6 மாத காலத்தில் தமிழர் நலன் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகளை பிரதமர் மோடி நிறைவேற்றிவிட்டார் என்று அர்த்தமா? அல்லது Goback Modi என்பது அப்பாவி சிறுபான்மை மக்களை குறிப்பாக முஸ்லிம் சகோதரர்களை ஏமாற்றுவதற்கு கையில் எடுத்த அரசியல் ஆயுதமா? என்பதை விளக்க வேண்டும். இந்த 6 மாத காலத்தில் திமுக முன்வைத்த நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற சட்டசபை தீர்ர்மானத்துக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டதா? இன்றைக்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகை தமிழகத்துக்கு வழங்கப்பட்டதா?
7 தமிழர் விடுதலைக்கு ஒப்புதல் கிடைத்ததா?
ஊரக உள்ளாட்சித் துறைக்கு வரவேண்டிய நிதி வந்துவிட்டதா? எழுவர் விடுதலை விவகாரத்தில் நீங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு, 7 தமிழரை விடுதலை செய்துவிட்டீர்களா? என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் விளக்க வேண்டும். சுட்டுக் கொல்லப்படும் மீனவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று நீங்கள் எழுதிய கடிதத்துக்கு பதில் கிடைத்துவிட்டதா?
வெள்ளைக் கொடி ஏன்?
ஏழை எளிய மக்களுக்கு கட்டித்தரக் கூடிய வீடுகளுக்காக்க, மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி வந்துவிட்டதா? கிராமப்புற ஏழை மக்கள் பயனடைந்து வரும் 100 நாள் வேலை திட்டத்துக்கான ரூ1,178 கோடி நிலுவைத் தொகையை வாங்கிவிட்டீர்களா? திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றிவிட்டதா? கொரோனா, புயல் வெள்ள பேரிடர் காலத்துக்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு கொடுத்துவிட்டதா?.. இப்படி எண்ணற்ற கோரிக்கைகளை மத்திய அரசிடம் வைத்திருக்கிறீர்கள். ஆனால் மத்திய அரசு பதில் தரவில்லை. ஆனால் அன்றைக்கு பறக்கவிட்ட கறுப்புக் கொடியை இன்று வெள்ளைக்கொடியாக்கி பறக்கவிட்டிருப்பதன் சூட்சமம்தான் என்ன?