நெருக்கடியில் எடப்பாடி பழனிசாமி.. சென்னை நிர்வாகிகளுடன் இன்று முக்கியமான மீட்டிங்.. பரபரப்பு
சென்னை: லோக்சபா தோ்தல் தோல்வி தொடா்பாக சென்னையில் உள்ள 3 தொகுதிகளின் நிா்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தவுள்ளாா். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தேர்தல்களில் தடுமாறுவது அதிமுகவிற்கு தொடர்கதையாகி வருகிறது. 2019தேர்தல் தொடங்கிய அதிமுகவின் போக்கு , அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் முடிவிலும் எதிரொலித்தது. ஜெயலலிதா தலைமையில் கடைசியில் 2014ம் ஆண்டு அதிமுக எதிர்கொண்ட நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதிகள் என்ற வரலாறு காணாத வெற்றி பெற்றது. ஆனால் அதிமுக அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு தொகுதியைக்கூட வெல்ல முடியாமல் போயிருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் அதிமுக கூட்டணி ஒரு இடத்தில் வெற்றி பெறவில்லை. தென்சென்னை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், புதுச்சேரி ஆகிய 7 தொகுதிகளில் அதிமுக டெபாசிட்டையே பறிகொடுத்துள்ளது. இதில் தேனி தொகுதி அதிமுக ஒரு காலத்தில் மிகவும் வலுவாக இந்த தொகுதியாகும். அதிமுகவின் கோட்டை என்று அழைக்கப்பட்ட தொகுதியில் மிகவும் பரிதாபமாக தோற்றது. இதேபோல் அதிமுக தனது மற்றொரு கோட்டையான கோவையில் நூலிழையில் தான் டெபாசிட்டை தக்க வைத்தது.
ஒட்டுமொத்தமாக அதிமுக கூட்டணி 27 தொகுதிகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தது. அதிமுக 24 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சியான தேமுதிக 3 இடங்களிலும் இரண்டாவது இடத்தில் வந்திருந்தன. தமிழ்நாட்டில் மற்ற 12 தொகுதிகளில் பாஜக கூட்டணி இரண்டாது இடத்தைப் பிடித்து அதிரடி காட்டியது. இதனிடையே கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் அதிமுக நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருந்தது.
நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் அதிமுக கூட்டணி 23 சதவீதமும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 18.2 சதவீதமும் வாக்குகளைப் பெற்றிருப்பது தெரியும். அதிமுக ஒரு தொகுதியைக்கூட கைப்பற்றாமல் இருப்பது ஒன்றும் புதிதல்ல.. ஜெயலலிதா காலத்தில் கூட அது நடந்திருக்கிறது. ஆனால், அதிமுக கூட்டணி ஒருபோதும் 30 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றதில்லை. ஆனால் முதல்முறையாக இந்த முறை வெறும் 23 சதவீதம் வாக்குகளை பெற்றிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து தேர்தல் தோல்வி தொடா்பாக கடந்த ஜூலை 10 முதல் தொகுதி வாரியாக நிா்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறாா். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி, சேலம் தொகுதிகளின் நிா்வாகிகளுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
இந்த நிலையில், வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை தொகுதிகளின் நிா்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளாா். மீட்டிங்கில் சந்திக்கும் நிர்வாகிகளிடம் 2016 சட்டப்பேரவைத் தோ்தல் பணியைத் தொடங்குமாறு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி வருகிறாா். அந்த வகையில் சென்னை தொகுதி நிா்வாகிகளுக்கும் அவா் ஆலோசனை நடத்தும் நிலையில், கட்சி நிர்வாகிளுக்கு முக்கிய ஆலோசனை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications