பொதுக்குழுவை கூட்டுறோம்- அண்ணனை பொதுச்செயலாளராக்கிறோம்...எடப்பாடி கோஷ்டியின் அடேங்கப்பா சபதம்!
சென்னை: அதிமுகவின் உட்கட்சி மோதலின் அடுத்த கட்டமாக விரைவில் பொதுக்குழுவை கூட்டுவது என எடப்பாடி பழனிசாமி கோஷ்டி தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்பொதுக்குழுவில் தம்மை பொதுச்செயலாளராக்கி ஓ.பன்னீர்செல்வத்துக்கு செல்வாக்கு எதுவும் இல்லை என்பதை மீண்டும் வெளிப்படுத்த நினைக்கிறதாம் எடப்பாடி பழனிசாமி தரப்பு.
அதிமுகவில் சசிகலாவை சேர்க்கும் விவகாரத்தில் அக்கட்சியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. சசிகலாவுக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வம் பேசியதில் என்ன தவறு என்கிறார் மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ.

எடப்பாடிக்கு எதிராக கலகக் குரல்
இன்னொரு பக்கம், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காமல் போகா காரணமே எடப்பாடி பழனிசாமி; தமது பதவியை தக்க வைக்க பாஜகவை முழுமையாக ஆதரித்தார் எடப்பாடி பழனிசாமி என பகிரங்கமாக விமர்சித்தால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் சிறுபான்மையினர் நலப் பிரிவு துணை செயலரான ஜெ. பஷீர். ஆனால் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார் ஜெ. பஷீர்.

நடவடிக்கையா?
முன்னதாக ஓ.பன்னீர்ச்செல்வத்திடம் பேசிய எடப்பாடி பழனிசாமியின் தூதர், உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என சிலர் சொல்கின்றனர் என கூறியிருந்தார் என்கிற தகவல்கள் வெளியாகின. இதற்கு பதிலடியாக முடிந்தால் என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பாருங்கள் என எகிறினார் ஓ.பன்னீர்செல்வம் எனவும் கூறப்பட்டது. இது தொடர்பாக ஆலோசித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு அடுத்த கட்ட நடவடிக்கைகளில் தீவிரமாக களமிறங்க தொடங்கிவிட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் பொதுக்குழு
அதாவது விரைவில் அதிமுக பொதுக்குழுவை கூட்டுவோம்; அதிமுக பொதுக்குழுவில் தங்களுக்கே பலம் இருக்கிறது என்பதையும் நிரூபிப்போம்; அதன்படியே அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வோம் என்பதுதான் அந்த அணியின் திட்டம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் சொல்லப்பட்டும் வருகிறது.

ஓபிஎஸ் அணி பதிலடி தரும்
இதையடுத்து சமூக வலைதளங்களில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள், அடுத்த பொதுச்செயலாளர் என்ற வாசகத்துடன் எடப்பாடி பழனிசாமி படத்தை மட்டும் அச்சிட்டு பரப்பி வருகின்றனராம். பொதுக்குழுவில் ஓபிஎஸ்-க்கு செல்வாக்கு இருக்காது என கணித்திருக்கிறதாம் எடப்பாடி தரப்பு. ஆனால் சசிகலா விவகாரத்தில் தங்களுக்கே பெரும்பான்மை ஆதரவு இருக்கும் என நம்புகிறதாம் ஓபிஎஸ் தரப்பு. இதனால் அதிமுகவின் உட்கட்சி மோதல் இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கவே செய்யும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications