தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்றால்.. 3-வது முறையாக 2021-ல் மகத்தான வெற்றி: ஓபிஎஸ் ட்வீட்
சென்னை: 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
2021 சட்டசபை தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து சில நாட்களாக சர்ச்சை நீடித்து வருகிறது. இதனால் அதிமுகவில் புதிய சலசலப்பும் ஏற்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரை தவிர்த்த 3-வதாக ஒருவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தலாம் என்கிற பேச்சும் அதிமுகவில் வலம் வருகிறது.

இன்னொருபக்கம், 2021 சட்டசபை தேர்தலில் திமுகவுக்கும் எங்களுக்கும்தான் போட்டியே என பாஜகவுக்கு தாவிய விபி துரைசாமி போன்றவர்கள் கொளுத்தி போட்டிருக்கின்றனர். இதனால் தமிழக அரசியல் களம் பரபரத்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு. அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு.

அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள்! என கூறியுள்ளார். மேலும் தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே! என்ற பாடலையும் ஓபிஎஸ் தமது ட்வீட்டில் மேற்கோள்காட்டியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications