தவெகவை கூட்டணி நோக்கி நகர்த்தும் அதிமுக.. எதிர்க்க தயாராகிவிட்ட திமுக.. சட்டசபையில் நடந்த சம்பவம்!
சென்னை: சட்டசபையில் நேற்று அரங்கேறிய சம்பவங்கள் மூலமாக அதிமுக - தவெக கூட்டணியை எதிர்க்க திமுக தயாராகிவிட்டதாக பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் தவெகவின் குரலாக எடப்பாடி பழனிசாமி மாறிவிட்ட நிலையில், இன்னொரு பக்கம் அதிமுக கூட்டணி பற்றிய பேச்சுகளுக்கு தவெக அமைதி காத்து வருகிறது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ளது. இம்முறை திமுக, அதிமுக, நாதக மற்றும் தவெக என்று 4 முனைப் போட்டி உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், தவெகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. அந்த சம்பவத்தில் தவெகவினரின் செயல்பாடுகளும் கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 16 நாட்களாக தலைமறைவாக இருந்துவிட்டு, சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட பின் உடனடியாக வெளி வந்தார். அதேபோல் தவெக தலைவர் விஜய் கரூர் செல்வதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் ஒரு தனியார் மண்டபத்தில் வைத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே சட்டசபையில் நேற்று அரங்கேறிய சம்பவங்கள் பல்வேறு கேள்விகளை உருவாக்கி இருக்கிறது. ஏனென்றால் தவெக சார்பாக பேசப்பட்டு வந்த விஷயங்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கேள்வி எழுப்பினார். அவை அனைத்திற்கும் ஏற்கனவே தமிழக அரசு விளக்கம் அளித்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேரடியாக எழுந்து, கூட்டணிக்காகவே அதிமுக இப்படி செய்கிறது.
அதிமுகவினர் பாதிக்கப்பட்டால் கூட இப்படிப்பட்ட குரல் அதிமுகவிடம் இருந்து வந்து இருக்குமா என்று தெரியவில்லை. கூட்டணிக்கு ஆள் சேர்க்கவே எதிர்க்கட்சித் தலைவர் பேசி வருகிறார். எந்த கூட்டணி அமைத்தாலும் எடப்பாடி பழனிசாமிக்கு பலன் தராது. எந்த மெகா - மகா கூட்டணி வைத்தால் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தவெகவுடன் கூட்டணி அமைக்கவே அதிமுக இப்படியான செயல்பாடுகளில் ஈடுபடுகிறது என்று குற்றம்சாட்டி இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. ஏனென்றால் அதிமுக - தவெக இடையிலான நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், அதிமுக உடன் கூட்டணி அமைக்க தவெகவை பல்வேறு தரப்பும் நெருக்கி வருவதாக பார்க்கப்படுகிறது.
அதனை திமுக தலைமை நன்றாக அறிந்து வைத்துள்ளது. இதனால் அதிமுக - தவெக கூட்டணியை எதிர்கொள்ள திமுக தயாராகிவிட்டது என்பதை சட்டசபையில் வைத்தே ஸ்டாலின் நேரடியாக கூறி இருக்கிறார். இதனால் டிசம்பர் மாதத்தில் எடப்பாடி பழனிசாமி - விஜய் இடையிலான சந்திப்பு நடக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications