கோயில் நகரங்கள்.. 16 தொகுதிகளை டிக் அடித்துக் கொடுத்த அமித்ஷா.. பட்டியலை பார்த்து பதற்றமான எடப்பாடி!
சென்னை: தமிழ்நாட்டின் கோயில் நகரங்களை குறி வைத்து மத்திய அமைச்சர் அமித்ஷா தேர்வு செய்துள்ள 16 தொகுதிகளின் விருப்பப் பட்டியல் அதிமுக வசம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதிமுக வலுவாக இருக்கும் ஏராளமான தொகுதிகளை அமித்ஷா தேர்வு செய்திருப்பதால், எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு கட்சிகளும் தற்போது இணைந்து தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் அதிமுக தரப்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இன்னொரு பக்கம் பாஜக தரப்பில் இப்போதுதான் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த 30 தொகுதிகளுக்கான பூத் கமிட்டி உறுப்பினர்களின் மாநாடு நடைபெற்றது. நெல்லையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்து கொண்டு மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டிற்கும் விருந்துக்கு சென்றார்.
அப்போது நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை ஆகிய இருவரிடம் மட்டும் அமித்ஷா தனியாக ஆலோசனை நடத்தியதாக தெரிய வந்தது. இதனை ஏற்கனவே ஒன் இந்தியா தமிழ் பதிவு செய்திருந்தது. இந்த நிலையில் அந்த ஆலோசனையில் பேசப்பட்டது என்ன என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அமித்ஷா தமிழ்நாட்டில் பாஜக போட்டியிடுவதற்கான விருப்பப் பட்டியலை நயினார் நாகேந்திரனிடம் கொடுத்துள்ளார்.
முதற்கட்டமாக 16 தொகுதிகள் அடங்கிய விருப்பப் பட்டியலை அமித்ஷா கொடுத்துள்ளதாக தெரிகிறது. அதனை எடப்பாடி பழனிசாமியிடம் தமிழக பாஜக கொடுத்திருக்கிறது. இதனை பார்த்த எடப்பாடி பழனிசாமி, பதற்றமாகி இருக்கிறார். ஏனென்றால் தமிழ்நாட்டின் கோயில் நகரங்களை கைப்பற்றும் வகையில் பாஜக வியூகம் அமைத்து விருப்பப் பட்டியலை கொடுத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் அந்த கோயில் நகரங்கள் அனைத்தும் அதிமுக வலிமையுடன் இருக்கும் தொகுதிகளாகும். பழனி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், ராமேஸ்வரம், திருவண்ணாமலை, கும்பகோணம், திருத்தணி, ஸ்ரீவில்லிபுத்தூர், பழநி, ஸ்ரீரங்கம் என்று அந்தப் பட்டியல் நீள்வதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு என்ன செய்வதென தெரியாமல் பதற்றத்தில் இருக்கிறதாம்.
ஏற்கனவே பிரதமர் மோடி தூத்துக்குடி வந்த போது திருச்செந்தூர், ராமேஸ்வரம் உள்ளிட்ட கோயில்களை பற்றி பேசி இருந்தார். அதேபோல் அரியலூர் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்கும் சென்றிருந்தார். அடுத்ததாக திருவண்ணாமலைக்கு வரவிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பயணம் அடுத்தடுத்த மாதங்களிலும் தொடரும் என்று கூறப்படுகிறது.
பாஜகவின் முதற்கட்ட விருப்பப் பட்டியலை கொடுத்துள்ளதன் காரணமாகவே அண்ணாமலை தரப்பும் அமைதி காத்து வருகிறதாம். எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்த அண்ணாமலை, கடந்த ஒரு வாரமாக எடப்பாடி பழனிசாமி அண்ணனை முதல்வராக பணியாற்றுவோம் என்று பேசுவதற்கான பின்னணியும் இதுதான் என்றும் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications