அப்பாடா.. தேமுதிக விலகியது பெரிய நிம்மதி.. இனி இரட்டை இலை "கேம் ஆன்.." பூரிப்பில் அதிமுக
சென்னை: அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியது அதிமுகவுக்கு ரொம்பவே நல்லது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
காங்கிரஸ் கூட்டணியில்,காங்கிரஸ் - 25 இடங்கள், விசிக - 6, மதிமுக - 6, இந்திய கம்யூனிஸ்ட் - 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- 6, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 3, கொங்கு மக்கள் தேசிய கட்சி- 3, மனிதநேய மக்கள் கட்சி - 2, தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித் தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு இடம் பெற்றுள்ளன. எனவே 174 தொகுதிகளில் போட்டியிடும் நிலைமை உருவாகியுள்ளது.
அதேநேரம், அதிமுக கூட்டணியில் இருப்பவை பெரிய கட்சிகள். எனவே, அதிமுக கூட்டணியில் தேமுதிக இருந்திருந்தால், குறைந்த தொகுதியில் இரட்டை இலை போட்டியிடும் வாய்ப்பு உருவாகியிருக்கும். ஆனால் இப்போது தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே, தேமுதிக விலகியது அதிமுகவுக்கு நல்லது என்கிறார்கள், அந்த கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள்.

ஜெயலலிதா திட்டம்
2016 சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுமாறு பார்த்துக் கொண்டார் ஜெயலலிதா. சில சிறு கட்சிகள் அந்த கூட்டணியில் இருந்தபோதும் கூட அவையும் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட்டன.

பெரிய கட்சிகள்
அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ,பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தேமுதிகவும் இந்த கூட்டணியில் இருந்து இருந்தால் அவர்களுக்கும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்க வேண்டும். இதன் காரணமாக இரட்டை இலை சின்னம் அதிக தொகுதிகளில் போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகி இருக்கும்.

இரு சின்னங்கள்
தமிழகத்தை பொருத்தவரை உதயசூரியன் மற்றும் இரட்டை இலை ஆகிய இரண்டு சின்னங்கள் மக்கள் மத்தியில் பரிச்சயம். சின்னத்தை பார்த்து வாக்களிக்கக் கூடிய பெருவாரியான மக்கள் கொண்ட மாநிலம் தமிழகம். இதை மனதில் வைத்துதான், ஜெயலலிதா அப்படி ஒரு முடிவை போன தேர்தலில் எடுத்தார்.

இரட்டை இலைக்கு நல்லது
இப்போது தேமுதிக வெளியேறி இருப்பதால் பெரும்பாலான தொகுதிகளில் உதயசூரியன் மற்றும் இரட்டை இலை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். அதிமுகவுக்கு இது ஒருவகையில் நல்லது. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போட்டியிடும் தொகுதிகள் என்றால் இரட்டை இலை சின்னத்துக்கு இன்னமும் நல்லது என்கிறார்கள் அந்த கட்சியினர் நமட்டு சிரிப்புடன்.

கடந்த காலத்தில் வாழும் தேமுதிக
அதேநேரம் தேமுதிக கட்சி விஜயகாந்த் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்போது இருந்த நிலைமை வேறு. கடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவை விட குறைந்த வாக்கு சதவீதம் பெற்ற கட்சிதான் தேதிமுக. ஆனால் பாடிய பல்லவியை பாடி கொண்டு, கடந்த கால நிகழ்வுகளில் மூழ்கிக் கொண்டு, இப்போது இருக்கும் நிலவரம் தெரியாமல் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டு தனக்குத்தானே ஆபத்தை தேடிக்கொண்டது தேமுதிக. அந்த கட்சி தனித்துப் போட்டியிட்டால் கைக்காசு போட்டு செலவிடுவதற்கு பெரும்பாலான நிர்வாகிகள் தயாராக இல்லை என்பதுதான் கள நிலவரம்.












Click it and Unblock the Notifications