திருச்சியை வைத்து பிரமாண்ட திட்டம்.. அதிமுக பொதுக்குழுவின் 23 தீர்மானங்களில் இதுவும்? கசிந்த தகவல்!
சென்னை : விரைவில் திருச்சியில் பிரமாண்ட மாநாடு நடத்த அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
Recommended Video
இன்று நடைபெறும் பொதுக்குழுவில் தன்னிடம் ஒப்புதல் பெறப்பட்ட 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியாது என நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை பெற்றுவிட்டார் ஓபிஎஸ்.
இன்றைய பொதுக்குழுவில் திமுக அரசைக் கண்டிப்பது உள்ளிட்ட 23 தீர்மானங்கள் இடம்பெறுகின்றன. அதில், அதிமுகவின் வளர்ச்சிக்கான முக்கிய தீர்மானமாக திருச்சியில் மாநாடு நடத்துவதும் உள்ளதாக கூறப்படுகிறது.

பரபர பொதுக்குழு
பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தனியார் திருமண மண்டபத்தில் திரண்டுள்ளனர். பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனுவில் தீர்ப்பு வந்த பிறகு ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்து 23 தீர்மானங்களை தவிர புதிதாக வேறு தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது எனும் நிபந்தனையோடு பொதுக்குழு நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில்தான், காலை முதலே பரபரப்புடன் இருந்து வருகிறது அதிமுக பொதுக்குழு நடைபெறும் பகுதி.

23 தீர்மானங்கள்
அ.தி.மு.க கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க அரசு முடக்குவதைக் கண்டித்தும், ஆளும்கட்சியின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் தீர்மானங்கள் கொண்டு வரப்படுகிறது. இதுதவிர முல்லைப் பெரியாறு அணை, மேகதாது, காவிரி பிரச்சனை போன்ற பொதுவான பிரச்சனைகள் தொடர்பான தீர்மானங்களும் இடம்பெற்றுள்ளன. இதுபோல மொத்தம் 23 தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. பொதுக்குழுவில் இந்த 23 தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த 23 தீர்மானங்களுக்கும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் நேற்று மதியம் ஒப்புதல் அளித்துவிட்டார்.

முக்கிய தீர்மானம்
இந்த 23 தீர்மானங்களில் திருச்சியில் மிகப்பெரிய மாநாட்டை நடத்தவேண்டும் என்பதும் உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. கட்சியில் இருந்து வரும் குழப்பமான சூழலை ஒட்டியும், தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ள எதிர்க்கட்சியாகச் செயல்படுவது யார் என்ற விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் திருச்சியில் மிகப்பெரிய அளவில் ஒரு பிரமாண்ட மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி கட்சிக்கு வலு சேர்க்க வேண்டும் என்ற ஒரு முக்கியமான தீர்மானம் இன்று நடைபெறும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் எனக் கூறப்படுகிறது.

திருச்சியில்
திருச்சியில் அதிமுக மாநாடு நடத்த திட்டமிடுவதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. திருச்சி என்றாலே திமுகவிற்கு திருப்புமுனை.. திருச்சியில் நடைபெறும் மாநாட்டைத் தொடர்ந்து திமுகவுக்கு நல்ல பலன்கள் கிடைத்துள்ளன என ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் பேசுவது வழக்கம். திமுக முதன்முதலில் தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா என வாக்கெடுப்பு நடத்தப்பட்டதே திருச்சி மாநாட்டில்தான். ஜெயலலிதாவும் பல முக்கியமான மாநாடுகளையும், பொதுக்கூட்டங்களையும் திருச்சியில் வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.

அடுத்த இன்னிங்ஸ்
இந்நிலையில், தொடர் தோல்விகளால் கொஞ்சம் தளர்ந்து போயிருக்கும் தொண்டர்களை சுறுசுறுப்பாக்கி, கட்சியை பலப்படுத்தும் முயற்சிக்காகவே இந்த பிரமாண்ட மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாம். சில மாதங்களுக்கு முன்னதாகவே பெரிய அளவில் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டும், கட்சிக் குழப்பங்களால் தள்ளிப்போனதாகவும், பொதுக்குழு கூட்டம் முடிந்த கையோடு ஏற்பாடுகள் துவங்கி, மாநாடு அனைவரும் வியக்கும் வகையில் நடைபெறும் என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.












Click it and Unblock the Notifications