39 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெல்லப்போகிறதாம்.. எடப்பாடி சொல்லும் 'கணக்கு' காரணம் இதுதான்
சென்னை: இந்த முறை 39 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சிவகங்கை தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து, திருப்பத்தூரில் நேற்று இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.
அப்போது எடப்பாடி பழனிச்சாமி, கோபமாக ஸ்டாலினை விமர்சனம் செய்து பேசினார்.
மோடி பிரதமர்
திருப்பத்தூரைச் சேர்ந்த தொண்டன் கூட அதிமுகவில் முதல்வராக முடியும். எங்கள் கூட்டணி மெகா கூட்டணி. இதனால் பயத்தில், ஸ்டாலின் ஏதேதோ உளறி வருகிறார். நாட்டு மக்கள் பாதுகாப்பாக வாழ மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். நிறைவேற்ற முடியாத தேர்தல் அறிக்கையை பொய்யால் ஜோடித்து, திமுக வெளியிட்டு உள்ளது.
நிறைவேற்றாத கருணாநிதி
அதிமுகவோ, நிறைவேற்ற முடிந்ததை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு உள்ளோம். ஜெயலலிதா 2011ல் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை அப்படியே, நிறைவேற்றினார். அதே போல் 2016ம் ஆண்டு தேர்தலில் அவர் அளித்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். கருணாநிதி நிலம் இல்லாதவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக சொன்னார். நிறைவேற்றவில்லை என்பதை நீங்கள் மறக்க கூடாது.
மகன்களுக்காக பாடுபடும் அப்பாக்கள்.. தொகுதிக்குள்ளேயே முடங்கி போன தலைவர்கள்.. இது விசித்திர தேர்தல்
சிதம்பரம் மகன்
சிவகங்கை தொகுதியை சேர்ந்தவர் ப.சிதம்பரம். மத்தியில் எவ்வளவோ நல்ல அதிகாரம்மிக்க பதவிகளில் இருந்தவர். ஆனால், தமிழகத்திற்கும், சிவகங்கை தொகுதிக்கும் இம்மி அளவு கூட நன்மை செய்யாதவர். திமுகவில் ஸ்டாலின் மகன் ஆதிக்கம் செலுத்துவது போல், இங்கு சிதம்பரம் மகன் ஆதிக்கம் செலுத்துகிறார்.
அனைத்தும் அதிமுகவுக்கு
என்னை மண்புழு என்று ஸ்டாலின் கூறினார். ஆனால் நான் மண்புழு உரமாக இருந்து உழவனின் நண்பனாக செயல்படுவேன். இந்தியாவை வழி நடத்த உறுதியான பிரதமர் வேண்டும். அதற்கு மீண்டும் மோடியே தகுதியானவர். 2014ம் ஆண்டு தேர்தலின் போது அதிமுக 37 இடங்களையும், பாஜக, பாமக தலா ஒரு இடமும் பெற்றன. தற்போது இவை அனைத்தும் ஒரே அணியில் உள்ளன. அப்படியானால், நமது கூட்டணிதான் 39 இடங்களையும் கைப்பற்றும். ஸ்டாலின் தோல்வி பயத்தில், விரக்தியின் விளிம்பில் வரம்பு மீறி வசை பாடுகிறார். இவ்வாறு முதல்வர் பேசினார்.