“வாக்காளர் பட்டியலில்.. ஒரு வாக்காளர் கூட விடுபட்டுவிட கூடாது!” அதிமுக ஜெயக்குமார் வலியுறுத்தல்!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வந்த சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையானது (எஸ்ஐஆர்) நிறைவடைந்திருக்கிறது. இந்நிலையில் தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தகுதியான ஒரு வாக்காளர் கூட பட்டியலிலிருந்து விடுபட்டுவிடக் கூடாது" என்று வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்ததாவது, "குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும், ஒரே வாக்கு சாவடியில் வாக்களிக்கும் விதத்தில் வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம்.

குடும்பத்தில் தந்தை ஒரு பூத்திலும், மகன் ஒரு பூத்திலும் வாக்களிக்கும் நடைமுறையை உருவாக்கி விடக்கூடாது என்று வலியுறுத்தினோம். அதேபோல தொகுதி வாரியாக உயிரிழந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், இரட்டை வாக்காளர்கள் எவ்வளவு என்கிற விவரத்தை கோரியிருக்கிறோம்.
உரிய வாக்காளர்கள் விடுபட்டு போய்விடக்கூடாது என்பதை நாங்கள் வலியுறுத்தி உள்ளோம். சென்னையில் மட்டும் சுமார் 14 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் விடுபட்டு போயிருப்பதாக வரைவு வாக்காளர் பட்டியல் தெரிவித்திருக்கிறது. விடுபட்டு இருப்பவர்களில், உயிரிழந்தவர்களை தவிர மற்ற அனைவருக்கும் மற்றொரு வாய்ப்பு கொடுத்து, சரியான வாக்காளர்கள் யாரும் பட்டியலில் இருந்து விடுபட்டு விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
எஸ்ஐஆர் நடவடிக்கையை அதிமுக வரவேற்பதற்கான காரணம், இறந்து போன வாக்காளர்களின் பெயர்களில் போலி வாக்குகள் பதிவு செய்யப்படுகிறது என்பதால்தான். தற்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழந்த வாக்காளர்களை தேர்தல் ஆணையம் பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக இவர்கள் உயிரோடு இருந்திருக்கின்றனர். அவர்கள் பெயரில் போலி வாக்குகள் பதிவாகி இருக்கிறது. இந்த பட்டியல் வெளியானதன் மூலம்தான் அவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.
தற்போது வெளியாகி இருப்பது வரைவு வாக்காளர் பட்டியல். இறுதி வாக்காளர் பட்டியல் கிடையாது. இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்காக, ஒரு மாத காலம் தேர்தல் ஆணையம் அவகாசம் வழங்கி இருக்கிறது. இந்த காலகட்டத்தில்தான் அரசியல் கட்சிகள், தங்களுடைய வேலைகளை தொடங்க வேண்டும். வீடு வீடாக சென்று இந்த பட்டியலில் உள்ளவர்கள் விடுபட்டு இருக்கிறார்களா? அல்லது தொகுதியில் வசிக்கும் மக்களின் பெயர் பட்டியலில் விடுபட்டிருக்கிறதா? என்பதை ஆய்வு செய்து, அவர்களுக்கு படிவம் கொடுத்து இந்த பட்டியலில் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications